Politics

“பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் குளிர்பதனக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது” - பிரியங்கா காந்தி சாடல்!

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாகக் குறையும் என்று மத்திய அரசு கணித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த இரு காலாண்டுகளில் 5 சதவீதம் மற்றும் 4.5 சதவீதமாக வளர்ச்சி குறைந்த நிலையில், வரும் காலாண்டுகளில் பொருளாதார மந்தநிலை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித்துறை மற்றும் கட்டுமானத்துறையில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையால் ஏற்பட்டுள்ள வேலையின்மை, தேவைக்குறைவு போன்றவை பொருளாதாரச் சீர்கேட்டுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தொடரும் பொருளாதார நெருக்கடி குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பா.ஜ.க அரசை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

“பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு அதிக கவனம் அளிக்கவேண்டும். ஆனால், பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை என்பது குளிர்பதனக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரச் சூழல் சரியில்லை என்று உள்நாட்டு மொத்த உற்பத்தி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பொருளாதார வளர்ச்சிக்குறைவு வர்த்தகர்கள், ஏழைகள், தினக்கூலி வேலைக்குச் செல்வோர், மாத ஊதியம் பெறுவோர், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாகப் பாதிக்கும்.

இதுவரை இந்த சிக்கலைத் தீர்க்கவோ, வேலைவாய்ப்பின்மை சிக்கலைத் தீர்க்கவோ மத்திய பா.ஜ.க அரசு சார்பில் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Also Read: 'மோடி ஆட்சியில் இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டினர் அச்சம்’ : உலக பொருளாதார நிபுணர் ‘பகீர்’ !