Politics

“தூங்குபவரை எழுப்பலாம்; தூங்குவதுபோல நடிப்பவரை எழுப்பமுடியாது”-மாஃபா பாண்டியராஜனுக்கு ஜெ.அன்பழகன் பதிலடி!

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் தரங்கெட்ட பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, “அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைப் பற்றி ஒரு பொய்யான தகவலைச் சொல்லியிருந்தார். அதற்கு ஆதாரம் தருவதாகவும் அவர் கூறி இருந்தார். முதலில் மு.க.ஸ்டாலின் மிசா கைதி இல்லை என்று சொன்னவர் இப்போது மு.க.ஸ்டாலின் மிசா கைதிதான் அதில் மாற்றமில்லை என்று சொல்லிவிட்டு; ஆனால் என் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும் அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது எனவும் கூறுகிறார்.

மாஃபா பாண்டியராஜனின் மன்னிப்பு கேட்பதென்பது எங்களுக்குத் தேவை இல்லாதது. அமைச்சர்கள் இப்படி தரம் கெட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி இந்த அரசுக்கு மட்டுமல்ல; தமிழகத்திற்கும் கேவலமான விஷயம்.

தி.மு.க தலைவரைப் பற்றி மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு கிளப்பிய பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாஃபா பாண்டியராஜன் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடப் பார்த்தார். இஸ்மாயில் கமிஷன் அறிக்கையில் உள்ள உண்மையைத் தெரிந்துகொண்டு அதை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது போல புலம்பிக்கொண்டு இருக்கிறார். தூங்குபவரை எழுப்பலாம்; தூங்குவது போன்று நடிப்பவரை எழுப்ப முடியாது.

மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொண்டிருக்கும் தி.மு.கவை வீழ்த்தவேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க-வினர் இப்படி தரம்தாழ்ந்து விமர்சிக்கிறார்கள்; இப்படிப்பட்ட அரசு நீடிக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.