Politics

“இடைத்தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் நல்லாட்சி அமையும்”- விக்கிரவாண்டியில் கே.என்.நேரு தேர்தல் பரப்புரை!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், இடைத்தேர்தல் பிரசாரம் களைகட்ட துவங்கி உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் நா.புகழேந்தி இன்று விக்கிரவாண்டி சாலை, ஆசூர் உள்ளிட்ட இடங்களில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் கே.என்.நேருவும் உடன் சென்று வாக்குகள் சேகரித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, “22 தொகுதி இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்றது போல இந்தத் தேர்தலிலும் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம்.

இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் அடுத்து தமிழகத்தில் நல்லாட்சி அமையும். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் நல்ல வரவேற்பு தருகின்றனர். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.” என்றார்.

மாவட்டச் செயலாளர் மஸ்தான், சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, மாசிலாமணி, முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் உடன் சென்று வாக்குகள் சேகரித்தனர்.