Politics

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைப்பெற்ற தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இன்பதுரை தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ., இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.

அப்பாவு

இந்த தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும் வகையில் அந்த தொகுதியின் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளையும், தபால் வாக்குகளையும் வரும் அக்டோபர் 4 ம் தேதி உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளரிடம் ஒப்படைக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.