Politics

நாட்டின் ஜி.டி.பி 5% ஆக வீழ்ந்தது தான் மோடி அரசின் 100 நாள் சாதனை- குற்றச்சாட்டுகளை அடுக்கும் கபில் சிபல்

இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில்சிபல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பா.ஜ.க.வின் 100 நாள் ஆட்சியின் அவலங்கள் குறித்துப் பட்டியலிட்டார்.

அவர் பேசியதாவது, ''மோட்டார் வாகன துறையில் 3.5 லட்சம் வேலையிழப்பு, 300 வாகன விநியோகஸ்தர்கள் தங்களது நிறுவனங்களை மூடிவிட்டார்கள். பல மோட்டார் வாகன தொழிற்ச்சாலைகள் மாதம் தோறும் உற்பத்தி நிறுத்த நாட்களை அறிவிக்கின்றன. மூன்றில் ஒரு பங்கு ஜவுளி தொழில் முடங்கியுள்ளது.

எட்டு முக்கிய நகரங்களில் கட்டுமானத் தொழில் முடங்கியுள்ளது. இந்த பொருளாதார சீர்குலைவைத்தான் இந்த 100 நாட்களில் மோடி அரசு சாதித்துள்ளது.

இதனை மறைப்பதற்காக எதிர்கட்சிகள் மீது சி.பி.ஐ, அலமாக்கத்துறை, வருமான வரித்துறையினர் ஏவி விடப்படுகின்றனர். ஊழலில் திளைத்த பெல்லாரி சகோதரர்கள் மீதோ, வியாபம் ஊழல் மீதோ எந்த நடவடிக்கையும் இல்லை .

நாட்டின் வளர்ச்சி விகிதம் 5% அளவுக்கு வீழ்ச்சியடைந்ததுதான் மோடி அரசின் 100 நாள் சாதனை. இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.

விவசாய விளைபொருள்களின் வருவாய் 2020ல் இரட்டிப்பாக்கப்படும் என்று கடந்த 5 அண்டுகளாகச் சொன்ன பிரதமர் மோடி, இப்போது 2022 இல் இரட்டிப்பாக்கப்படும் என்கிறார். இது ஏமாற்று வேலை. அறிவிப்புக்கள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை என்பதுதான் உண்மை'' எனத் தெரிவித்தார்.