Politics

“ப.சிதம்பரத்தின் கைது, சட்டநியதிகளுக்குப் புறம்பான பழிவாங்கல் நடவடிக்கை” : கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்றிரவு ப.சிதம்பரம் வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். ப.சிதம்பரம் மீதான கைது நடவடிக்கைக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கைது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறையும், மத்திய புலனாய்வுத்துறையும் நேற்றிரவு அவரது வீட்டில் புகுந்து வலுக்கட்டாயமாக கைது செய்து, சிபிஐயின் கட்டுப்பாட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமினை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு செய்துள்ளார். அவ்வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள சூழ்நிலையில், அவசர கதியில் அவரது வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, பயங்கரவாதியை கைது செய்வது போல சுற்றிவளைத்து கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

பதவியிலிருக்கும் போது தவறுகள் இழைக்கப்பட்டிருக்குமாயின் சம்பந்தப்பட்டவர் யாராயிருப்பினும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டவிதிகளுக்கு உட்பட்டு கைது செய்வது தவறானதல்ல. ஆனால், ப.சிதம்பரம் அவர்களை கைது செய்திருக்கும் விதம் மற்றும் அவரை கைது செய்தே ஆகவேண்டும் என்பதில் காட்டப்பட்டிருக்கும் தீவிரம் அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கையேயாகும்.

எதிர்கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவதற்கும், காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்குவதற்கும் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பா.ஜ.க அரசு சட்டநியதிகளுக்கு புறம்பாக பயன்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.