Politics

வேலூர் தேர்தல் : எடப்பாடியின் தோல்வியை ரசித்து மகிழ்ந்த ஓ.பி.எஸ் - குமுறும் தொண்டர்கள்.. காரணம் என்ன?

2019 நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. முறைகேடுகள் நடந்ததாக சொல்லி, வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது.

தேர்தலின் முடிவுகளில், பா.ஜ.க 303 இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது. 39 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 37 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைத்த நேரத்தில், ஓ.பி.எஸ் தனது மகனுக்கு எப்படியாவது அமைச்சர் பதவி வாங்க கடினமாக முயற்சி செய்தார். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது விசுவாசியும், மூத்த ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.வைத்தியலிங்கத்திற்கு அமைச்சர் பதவி வாங்க காய் நகர்த்தினார். இதனால், ரவீந்திரநாத்தின் மத்திய அமைச்சர் கனவு தகர்ந்தது.

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க உறுப்பினர்களில் யாரேனும் இடம் பெறுவர் என்ற நம்பிக்கையுடன் இருந்த அ.தி.மு.க-வினர் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் ஒரு பகுதியாக இல்லாதது, இதுவே முதல் தடவையாகும்.

இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க சார்பில் ஏ‌.சி.சண்முகமும், தி.மு.க சார்பில் கதிர் ஆனந்தும் அறிவிக்கப்பட்டனர்.

இந்த முறை வெற்றி பெற்றால் நிச்சயம் மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் ஏ‌.சி.சண்முகம் களம் இறங்கினார். அ.தி.மு.க தரப்பில் முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் வேலூரில் கூடாரம் அடித்து கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்து களப்பணி ஆற்றினர்.

தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாள் வரைக்கும் முதல்வர் எடப்பாடியும் ,துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வமும் ஒரே மேடையில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யவே இல்லை. இதுவே அ.தி.மு.க தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது.எப்படியாவது ஏ‌.சி.சண்முகத்தை வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்று எடப்பாடி பெருமுயற்சி செய்தார்.

ஏ‌.சி.சண்முகம் வெற்றி பெற்றால், சீனியர் என்று சொல்லி பா.ஜ.க.,விடம் பேசி அமைச்சர் பதவி வாங்கி அதை ஏ‌.சி.சண்முகத்துக்குக் கொடுத்து விடலாம். ஆனால், என்ன நடந்தாலும் ஓ.பி.எஸ் மகனுக்கு அமைச்சர் பதவி சென்று விட கூடாது என்பதில் எடப்பாடி மிக தீவிரமாக இருந்தார்.

ஆனால் தேர்தல் முடிவுகள் எடப்பாடி நினைத்ததற்கு மாறாக வந்திருப்பது எடப்பாடியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எடப்பாடியின் இந்த நடவடிக்கையைக் கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ஓ.பி.எஸ் தேர்தல் முடிவு பற்றி கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லையாம். இதன் மூலம் அ.தி.மு.க தோல்வியை சந்தித்திருந்தாலும் கூட, எடப்பாடி அசிங்கப்பட்டு இருப்பதால், ஓ.பி.எஸ் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.