Politics
“ஆளுநர் அனுப்பும் கடிதங்களிலிருந்து என்னைக் காப்பாத்துங்க” : கர்நாடகா முதல்வர் குமாரசாமி வேண்டுகோள் !
கர்நாடக சட்டசபையில், குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மீது இரண்டாவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தியே ஆகவேண்டும் என பா.ஜ.க முரண்டுபிடித்து வருகிறது.
கர்நாடக முதல்வர் குமாரசாமியோ, அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அரசு மீது அதிருப்தியில் இருப்பதற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும். பா.ஜ.க அவர்களைக் கடத்தி வைத்துள்ளது எனக் குற்றம்சாட்டி வருகிறார்.
இன்றைய விவாதத்தில் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, “காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி அரசைக் காப்பாற்ற எனது அதிகாரத்தை தவறாக எந்தவிதத்திலும் பயன்படுத்தப் போவதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் அவசரப்பட தேவையில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது பொறுமையாக விவாதம் நடத்திய பிறகு வாக்கெடுப்பை நடத்தலாம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, பா.ஜ.க-வினரின் அழுத்தத்தின் காரணமாக நேற்று சபாநாயகருக்கு ‘நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தவேண்டும்’ எனக் கடிதம் எழுதிய கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, இன்று முதல்வர் குமாரசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கர்நாடக பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார் ஆளுநர் வஜுபாய் வாலா. பா.ஜ.க-வின் அழுத்தத்தின் காரணமாக அரசை நிர்ப்பந்திக்கும் ஆளுநரின் இந்தச் செயல் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.
இதுகுறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் குமாரசாமி, “குதிரை பேரம் நடக்க வாய்ப்புள்ளதால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என ஆளுநர் என்னை நிர்பந்தித்துள்ளார். ஆனால், பா.ஜ.க-வினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக நாங்கள் புகாரளித்தபோது ஆளுநருக்கு தெரியவில்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்த முடிவை சபாநாயகரிடமே விட்டுவிடுகிறேன். இந்த விஷயத்தை டெல்லி இயக்காது. ஆனால், ஆளுநர் அனுப்பும் கடிதங்களிலிருந்து என்னைப் காப்பாற்றுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி
-
“நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வர்ற வரைக்கும் தமிழ்நாடு தாங்காது CM Sir” : உதயநிதி கண்டனம்!
-
‘சிங்கப்பெண் திட்டம்’ ரத்தான நாளில்... பட்டு வேட்டி - சட்டையில் கலக்கிய ‘போட்டோ’ முதல்வர் விஜய்!
-
“விஜய் அரசின் சரிவு தொடங்கி இருக்கிறது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
சோபா மாடல் ஆட்சியில் போலீசாராலும் பாதுகாப்பு இல்லை போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை : உதயநிதி கடும் கண்டனம்