Politics

மோடி தனது ஜனநாயக விரோத செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் ! - திருநாவுக்கரசர் எச்சரிக்கை!

திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர், திருச்சி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர், நாடாளுமன்ற கூட்டத்தில் மக்கள் விரோத திட்டங்களை மசோதாக்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்வதாக குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர், “பிரதமர் மோடி, மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜனநாயக விரோத செயல்களில் மிக தீவிரமாக ஈடுபடுகிறார். கர்நாடகா, கோவா எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குகின்ற வேலையை பா.ஜ.க செய்து வருகிறது. இது ஜனநாயக விரோத செயல், மேலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இதேபோல் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மோடி இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததால், தன்னை ஆயுட்கால பிரதமராக நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் இவர் மட்டும் இரண்டாவது முறையாக பிரதமராக வரவில்லை. ஏற்கனவே ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரும் தொடர்ச்சியாக பிரதமராக இருந்துள்ளனர்.

நிச்சயமாக அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தேர்தலில் காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும். எனவே மோடி, தனது ஜனநாயக விரோத செயல்களை நிறுத்தி கொள்ள வேண்டும். மேலும் தமிழக மக்களின் நலன்களை நசுக்கும் மோடி அரசு அவர்களை எதிர்ப்பவர்களை தேசவிரோதி என தள்ளிவைக்கும் வேலையை செய்கின்றனர்". என அவர் கூறியுள்ளார்.