Politics

“எத்தனை வழக்குப் போட்டாலும் அதை சந்திக்கத் தயார்” - மத்திய அரசுக்கு எதிராக சீறிய வைகோ !

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத் துரோக வழக்கில் அவருக்கு சிறப்பு நீதிமன்றம், ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. தற்போது அந்த தண்டனையை எதிர்த்து வைகோ மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ.

தேசத் துரோக வழக்கின் மேல்முறையீடு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ மேல்முறையீட்டில் ஆயுள் தண்டனையே அளித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். நான் தண்டனைக்கு அஞ்சாதவன் என்பதை அனைவரும் அறிவர்.

பா.ஜ.க அரசு இந்தியாவை இந்தி மொழி பேசும் மாநிலங்களாக மட்டும் மாற்ற திட்டமிடுகிறது. அதேபோல், சிறுபான்மையின மக்களை அடியோடும் அழிக்க வேண்டும் என்றும், வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், அஞ்சல் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார் வைகோ. எதிர் வரும் காலங்களில் தமிழர்கள் இல்லாத அரசுத் துறையை ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.

இதற்கும் என் மீது வழக்கு தொடுத்தாலும் அதனை நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.