Politics

பா.ஜ.க பணபலத்தாலும், அதிகார பலத்தாலும் மாநில அரசுகளை கவிழ்க்க முயற்சிக்கிறது : ராகுல் காந்தி ஆவேசம்!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி அமைத்து வருகிறது. ம.ஜ.தவின் குமாரசாமி முதலமைச்சராக ஆட்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில், கர்நாடக அரசை கவிழ்ப்பதற்காக அம்மாநில பா.ஜ.க குதிரை பேரத்தை நடத்தி வருகிறது. அங்கு ஆட்சியைப் பிடிப்பதற்காக பா.ஜ.க காய் நகர்த்தி வருகிறது.

இந்நிலையில், அகமதாபாத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் கூறியதாவது, ‘‘மாநில அரசுகளை கவிழ்க்க பண பலத்தையும், அதிகார பலத்தையும் பா.ஜ.க பயன்படுத்துகிறது. இதுதான் உண்மை.

முதலில் கோவா, அடுத்து வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்தனர். தற்போது, அதே பாணியை கர்நாடகாவில் பின்பற்றுகின்றனர். ஆனால், காங்கிரஸ் உண்மைக்காக போராடுகிறது. உண்மைதான் காங்கிரசை வலுப்படுத்துகிறது.

என்னை அச்சுறுத்தும் முயற்சியாக இந்த அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் நான் பயப்படவில்லை. நான் தொடர்ந்து போராடுவேன். இது நாட்டின் எதிர்காலத்துக்கான போராட்டம். ஊழல் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான பேராட்டம். இது தொடரும்,’’ என அவர் தெரிவித்தார்.