முத்தரசன்
Politics

தி.மு.க கூட்டணி மிகுந்த பலத்தோடும் வலிமையுடன் உள்ளது - முத்தரசன் பேட்டி !

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தி.மு.க முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சந்திப்பிற்கு பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய டி ராஜா , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற இருப்பதாகவும், இதில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூ கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்தார்.

அடுத்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், தி.மு.க தலைமையில் இருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகுந்த பலத்தோடும் வலிமையுடன் உள்ளது. இதில் எந்த விரிசலும் இல்லை என தெரிவித்தார்.

பின்னர் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழகத்தில் தி.மு.க கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க ஒரே இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி கூறினேன். கேரள அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர முன் வந்தது. ஆனால் தமிழக அரசு அதை நிராகரித்து விட்டது, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட விஷயங்களை மனதில் வைக்காமல் எங்கிருந்து உதவிகள் வந்தாலும் தமிழகம் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.