Politics

மக்களவையில் கேள்வி எழுப்ப கனிமொழி மற்றும் சுப்ரியா சுலே ஆகியோருக்கு அனுமதி மறுப்பு!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார். அப்போது, போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதற்கு ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.

அப்போது, அந்த பதிலில் இருந்து துணைக் கேள்விகள் கேட்க தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே, தி.மு.க எம்.பி. கனிமொழி ஆகியோர் முயன்றனர். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

அப்போது பேசிய சுப்ரியா சுலே, "இது மிகவும் முக்கியமான விஷயம், இந்த விஷயத்தில் துணைக் கேள்விகள் கேட்கவேண்டும். ஆனால் நீங்கள் ஒரு துணைக் கேள்விகூட கேட்க அனுமதி மறுக்கிறீர்கள்" என்று பேசினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலேவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க எம்.பி. கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் சிலர் துணைக் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால், அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். பின்னர் பேசிய அவர், " நாடாளுமன்ற அலுவல் குழுதான் கேள்வி குறித்து முடிவு செய்கிறது. ஆதலால், கேள்வி நேரத்தின்போது, அதிகமான கேள்விகள் கேட்க அனுமதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அலுவல் குழுவிடம் ஆலோசனை தெரிவிக்கலாம்" எனத் தெரிவித்தார்.