Politics

கர்நாடக அரசு காவிரி நீரை திறக்கவேண்டும் : மக்களவையில் திருமாவளவன் பேச்சு!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் எம்.பி.களின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அதன்படி, வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி பேசுகையில், நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். விலக்கு அளித்தால் கிராமப்புற மாணவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்றார்.

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி கர்நாடக அரசு தண்ணீரை திறக்கவேண்டும் என்றும் கூறினார். இதற்கு கர்நாடகாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடுமையாக எதிர்த்து கோஷம் எழுப்பினர். இதனால், அவையில் சிறிதுநேரம் கூச்சல் ஏற்பட்டது.

இதனால், திருமாவளவனை அமரும்படி சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். ஆனால், திருமாவளவன் தான் இன்னும் பேச்சை முடிக்கவில்லை என்று கூறினார். எனினும், சபாநாயகர் அடுத்த எம்.பி-யை பேச அழைத்தார்.

இதையடுத்து, அவையில் இருந்த தி.மு.க எம்.பி கனிமொழி, திருமாவளவன் தனது பேச்சை முடித்துக்கொள்ளட்டும் என்று கோரிக்கை விடுத்தார். அனால் சபாநாயகர் திருமாவளவனை தொடர்ந்து பேச அனுமதிக்காமல், வேறு எம்.பி-யை பேச அழைத்தார்.