Politics

ஜனநாயகத்தின் மீது குண்டு வீசி இருக்கிறார் மோடி - கி.வீரமணி பேச்சு

தேசிய கல்விக்கொள்கையின் வரைவு 2019 அறிக்கை தமிழ் பிரதிக்கான நூல் வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயா சார்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் போது பேசிய ஆசிரியர் கி.வீரமணி, “தேசிய கல்விக்கொள்கை என்பது ஜனநாயகத்தின் மீதும், மாநிலங்களின் மீதும் பிரதமர் மோடி வீசியிருக்கும் முதல் குண்டு” எனக் கூறினார்.

மேலும், “தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை பின்பற்றி அனைத்து துறைகளிலும் சாதித்து வரும் நிலையில் மும்மொழிக் கொள்கை எதற்கு?” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய முத்தரசனும், பாலகிருஷ்ணனும் இந்தி மொழியை திணிப்பதில் மத்திய பா.ஜ.க. அரசு உறுதியாக உள்ளது. இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினர். இதற்கு தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசு ஊதுகுழலாக உள்ளது எனவும் குற்றஞ்சாட்டினர்.