Politics

இன்று முதல் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன் - ராகுல் காந்தி !

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மக்களவையின் தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியின் எம்.பி.யாக பதவியேற்றார். இதனையடுத்து மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர். தொடர்ந்து இன்று நடைபெற்ற 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவை இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் முன்னிலையில் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி-யாக ராகுல்காந்தி பதவியேற்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தொடர்ந்து 4-வது முறையாக மக்களவை உறுப்பினராக இன்று பணியை தொடங்குகிறேன். இன்று எம்.பி.யாக பதவியேற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் புதிய இன்னிங்ஸை தொடங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய அரசியலமைப்பிற்கு உண்மையான நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளவனாக இருப்பதை நான் உறுதிப்படுத்துகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.