Politics

மேற்குவங்கத்தில் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடைபெறுகிறது - திரிணாமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மேற்குவங்கத்தில், மக்களவைத் தேர்தலின் போது பா.ஜ.க - திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட கடும் மோதல், பல முறை வன்முறையாக வெடித்தது. தேர்தல் முடிந்தும் அங்கு தொடர்ந்து பல வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மேற்குவங்க அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள மேற்குவங்க அரசு, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மேற்குவங்க அமைச்சருமான பர்த்தா சட்டர்ஜி "மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடைபெறுகிறது. அரசியல் ரீதியாக திட்டமிட்டே இது நடக்கிறது. மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முறைகேடாக, ஜனநாயகத்துக்கு விரோதமாக, சட்டத்துக்கு புறம்பான முறையில் பா.ஜ.க.வை எதிர்ப்பவர்களை நசுக்க மத்திய அரசு முயலுகிறது. ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.