Politics

ஆந்திராவில் சட்டசபை கலைப்பு:ஆட்சியமைக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு கவர்னர் நரசிம்மன் அழைப்பு!

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் மக்களவை தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 23-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் ஆந்திரா தலைநகர் அமராவதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஆந்திரா சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஐதராபாத் சென்று, கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஆந்திராவில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சட்டமன்ற ஆளுங்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பான தீர்மான நகலையும் கவர்னரிடம் வழங்கினர்.

இதையடுத்து ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டப்பேரவையை கலைத்து கவர்னர் உத்தரவிட்டார். அத்துடன் வரும் 30-ம் தேதி ஆட்சியமைக்க வரும்படி ஜெகன் மோகன் ரெட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து ஆட்சியமைப்பதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன.

வரும் 30-ம் தேதி மதியம் விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி நகராட்சி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.