Politics

மோடிக்கு ஆதரவாக துணை ராணுவப் படையினர் பிரசாரம் செய்கின்றனர்- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு !

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, பசந்தி பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், தற்போது நடைபெற்று வரும் தேர்தலில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் பலர் மோடி அரசால் தேர்தல் பணிக்காக இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது மனம்போன போக்கில் எல்லாம் செயல்படுகின்றனர். பாஜகவுக்கும் மோடிக்கும் வாக்களியுங்கள் என்று வாக்குச்சாவடிக்கு வருபவர்களிடம் அங்கு காவலுக்கு நிற்கும் துணை ராணுவப் படையினர் வெளிப்படையாகவே பிரசாரம் செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

நான் மத்திய துணை ராணுவப்படைகளை அவமதிக்கவில்லை. ஆனால், அவர்களை கருவியாக வைத்து வாக்குச்சாவடிகளில் காத்திருக்கும் மக்களை பாஜகவுக்கு வாக்களிக்குமாறு நிர்பந்திப்பதை நான் எதிர்க்கிறேன். இப்படி செய்ய இவர்களுக்கு வெட்கமாக இல்லையா? இன்று நீங்கள் மோடியின் ஆட்சியின்கீழ் இருக்கலாம். நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இன்னொருவரின் கீழ் நிற்கும்போது உங்கள் கதி என்னவாகும்? என்று ஆவேசமாக பேசினார்.

கட்டால் தொகுதியில் இன்று ஒரு வாக்குச்சாவடிக்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் எங்கள் கட்சி தொண்டர் படுகாயம் அடைந்துள்ளார். தேர்தல் பணிக்காக அனுப்பப்படுவதுபோல் துணை ராணுவப் படையினருக்கான சீருடையில் இங்கு ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாஜக தொண்டர்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு குவித்து வைத்துள்ளது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.