Politics

“ஹோம் வொர்க் முடிக்காத குழந்தை போலக் காரணம் சொல்கிறார் மோடி” - பிரியங்கா விளாசல்!

பிரதமர் மோடி, சமீபத்தில் தேர்தல் பரப்புரையின்போது, ‘ராஜீவ் காந்தியை முன்வைத்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்க முடியுமா?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

வரும் ஞாயிறன்று டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரியங்கா காந்தி, ‘மோடி அவர்களே, டெல்லி பெண்ணாக உங்களுக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். கடைசி கட்ட மக்களவைத் தேர்தலை நீங்கள் கொண்டுவந்த பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி நடவடிக்கைகள், நீங்கள் உறுதியளித்து ஏமாற்றிய பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவற்றை முன் வைத்துச் சந்தியுங்கள்' என சவால் விடுத்துள்ளார்.

Priyanka Gandhi - Election Campaign

முன்னாள் பிரதமரும், நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது பெற்றவருமான ராஜீவ் காந்தியை, பிரதமர் மோடி ஊழல்வாதி எனப் பேசியது சர்ச்சைக்குள்ளானது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே மோடிக்கு சவால் விடுத்துள்ளார் பிரியங்கா.

மேலும் பேசிய பிரியங்கா, “பிரதமர் மோடியின் நிலைமை, வீட்டுப் பாடத்தை முடிக்காத ஒரு பள்ளிக் குழந்தையினுடையது போன்றது. பள்ளிக்கு வரும் குழந்தையிடம், ஏன் வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என்று கேட்டால், ‘நேரு, எனது வீட்டுப் பாடத்தை மறைத்து வைத்துவிட்டார்', ‘இந்திரா காந்தி, எனது வீட்டுப் பாட தாளில் விளையாட்டுப் பொருள் செய்துவிட்டார்' என்று சொல்வது போல காரணம் சொல்கிறார்” என்று விமர்சித்தார்.