Politics

கன்னியாகுமரியில் குறிவைத்து நீக்கப்பட்ட 45,000 வாக்காளர்கள்-பதில் கேட்கும் உயர்நீதிமன்றம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 45 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் நீக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோரிய மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் தூத்தூர், சின்னத்துறை, கடியப்பட்டினம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, இடலாக்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில், 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ் மீனவர் கூட்டமைப்பு கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஒக்கி புயல் தாக்கியபோது அரசு பாராமுகமாக இருந்ததால், மக்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சம் காரணமாக வாக்காளர் பட்டியலில் இருந்து அதிக எண்ணிக்கையில், குறிப்பாக கிறிஸ்துவ வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என மனுவில் குற்றச்சாட்டம்பட்டுள்ளது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கவும், அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் மறுதேர்தல் நடத்த உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

2016 சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர் தற்போது வாக்காளர் பட்டியலில் இல்லை. தேர்தல் ஆணையம் இதனை சரிபார்த்திருக்க வேண்டும். இந்த மனு குறித்து தேர்தல் ஆணையம் மனு அளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.