உணர்வோசை

நாம் இன்று வாழும் சமூகம் மனச்சிதைவு ஏற்படுத்தும் சமூகமா?

Erich Fromm என்கிற சமூகவியல் அறிஞர் 1955ம் ஆண்டிலேயே இப்படி சொல்கிறார்:

"The danger of the past was that men became slaves. The danger of the future is that men may become robots"

'கடந்தகாலத்தின் ஆபத்தாக மனிதர்கள் அடிமைகளாக்கப்படுவது இருந்தது. எதிர்காலத்தின் ஆபத்தாக மனிதர்கள் இயந்திரங்களாக்கப்படுவது இருக்கிறது’ என மொழிபெயர்க்கலாம்.

Hey Ram படத்தில் RSSஸால் இயக்கப்பட்ட ஒரு adamant அகங்கார தாத்தாவின் தன்மையை பற்றி பேரன் விளக்குகையில் இப்படிச் சொல்வார்:

"கதை கேட்டா பொதுவா எல்லாரும் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா’ன்னுதான் ஆரம்பிப்பாங்க. ஆனா, எங்க தாத்தா சொன்னா மட்டும், ‘நான் வாழ்ந்த ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு’ன்னு first person singularலதான் ஆரம்பிப்பார்”

இன்றைய தலைமுறையின் பெரும்பான்மை first person singular மனங்கள் கொண்டவர்கள்தான். நான், நான், நான் மட்டும்தான். அதிகபட்சம் போனால் ‘எனது’, ‘என்’ என்ற வார்த்தைகள் வரும். ஆனால் எப்போதும் ‘நம்’, ‘நாம்’ என்கிற சிந்தனையோ வார்த்தைகளோ வராது.

First person singular மனிதர்கள்தான் உங்களின் இணையாக, நண்பர்களாக, சக ஊழியராக இருப்பார்கள். அவர்கள் இயல்பாகவே தன்னை தாண்டி வேறு எவரை பற்றியும் சிந்திக்காதவர்களாகவே இருப்பார்கள்.

We are not culprits, but victims.

என்னதான் செய்வது?

‘நான்’, ‘என்’ என்ற சிந்தனையை நிறுத்திவிட்டு ‘நம்’, ‘நாம்’ என்கிற சிந்தனைமுறையை வளர்க்க கடுமையான முயற்சி எடுக்க வேண்டும். உதாரணமாக ‘யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க...’ என்பதை சற்று மாற்றி ‘நான் ஏன் யாரையும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறேன்’ என யோசித்துப் பாருங்களேன். ‘நம்ம வலிய மத்தவங்க புரிஞ்சிக்கணும்’ என்பதற்கு பதில் ‘நாம் மற்றவர்களின் வலியில் எந்தளவுக்கு உண்மையாக பங்குபெற்றோம்’ என யோசித்துப் பாருங்கள்.

அதிகமாக வாய்க்கு (பேச்சு) வேலை கொடுக்காதீர்கள். செவிக்கு (பிறர் பேசுவதை கேட்டல்) அதிகம் வேலை கொடுங்கள். உடனுக்குடன் பேச வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை உணருங்கள். வாழ்க்கை rapid fire round அல்ல. கேட்பவற்றை, படிப்பவற்றை மனதுக்குள் போட்டு அலசி ஆராய்ந்து சிந்தித்து நேரம் எடுத்து பிறகு பேசுங்கள்.

நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

நமக்கு தேவைப்படுகிற ‘செவிகள்’ போல் அனைவருக்குமே தேவைப்படுகிறது. நமக்கு தேவைப்படும் கரிசனம் அனைவருக்குமே தேவைப்படுகிறது. எனவே நாம் விரும்புகிற தீர்வாக நாமே முதலில் மாறுவோம். பிறகு தீர்வு தானாய் மலரும்.

Be the change!

சாவியின்றி தாழிடப்பட்ட கதவுகளை திறப்பதும் கூட சுலபம்தான். திறக்க முடியவில்லை எனில், உடைக்க வேண்டும். அவ்வளவுதான்.

எனவே உங்களை உடைத்துக் கொண்டு வெளியே வாருங்கள்.

Also Read: “3 தலைமுறைகளாக தொடரும் Generation Gap” : ஏன் தலைமுறை இடைவெளி ஏற்படுகிறது? - என்ன காரணம்?