murasoli thalayangam

‘கிரிமினல்களின் கூடாரமாக தவெக’.. 20 நாளில் த.வெ.க. நிர்வாகிகள் ஆடிய ஆட்டம் : முரசொலி விமர்சனம்!

த.வெ.க. நிர்வாகிகளின் அராஜகங்கள்!

‘தற்குறிகளின் கூட்டம்’ என்று அதனை மட்டமாக நினைத்துவிட முடியாது. அவர்களில் பலர் நடத்தும் அராஜகத்தையும், அட்டூழியத்தையும் பார்க்கும் போது ‘கிரிமினல்களின் கூடாரம்’ ஆக அது இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

கடந்த இருபது நாளில் த.வெ.க. நிர்வாகிகள் ஆடிய ஆட்டம் இவை....

•«தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் த.வெ.க. தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், ராமநாதபுரம் மாவட்ட த.வெ.க. நிர்வாகி ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

•«சென்னை காசிமேட்டில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆர்.கே. நகர் 43–ஆவது வார்டு த.வெ.க. பகுதிப் பொறுப்பாளர் ‘பாம்பு’ தினேஷ் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

•«தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த த.வெ.க. நிர்வாகி தியாகு (32) கைது செய்யப்பட்டுள்ளார்.

•«மதுரை கீழமாத்தூர் பகுதியில் பெயிண்டர் வேலை பார்த்து வரும் த.வெ.க. நிர்வாகி கண்ணன், 10–ஆம் வகுப்பு மாணவியின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று பாலியல் தொல்லை அளித்தபோது கையும் களவுமாகச் சிக்கினார். கைது செய்யப்பட்ட அவர் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

•«100–க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி சுமார் 25 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்ததாகப் புதுக்கோட்டை மத்திய மாவட்ட த.வெ.க. செயற்குழு உறுப்பினர் சரவணன் கைதானார்.

•«கும்பகோணம் நாலுரோடு பகுதியில் சாலையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட த.வெ.க. பேனரை அகற்றக் கூறிய போக்குவரத்து காவலரைத் தாக்கி, அவரது கையை முறித்த த.வெ.க. தொண்டர்கள் அருண், காளி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

•«பல்லடம் காவல் நிலையத்துக்குள் புகுந்து த.வெ.க.வினர் ‘ரீல்ஸ்’ எடுத்துள்ளார்கள். விஜய்யின் சினிமா பாடலுடன் சேர்த்து வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

•«ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பாலப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன், த.வெ.க. கிளைச் செயலாளர். இவரால் பாதிக்கப்பட்ட மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாகப் புகார் அளித்துள்ளனர். த.வெ.க. நிர்வாகி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.

•«நாமக்கல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் எம்.எல்.ஏ., திலீப் ஆய்வு செய்தபோது, உடன் சென்ற த.வெ.க. மாவட்டச் செயலாளர் சதீஸ், அங்கிருந்த மாநகராட்சி வருவாய் ஆய்வாளரை ஒருமையில் பேசியதுடன், ‘டிரான்ஸ்பர் செய்து விடுவேன்’ என மிரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

•«பெருங்களத்தூரில், ஆப்பரேட்டர் துரை என்பவர், கட்டிட இடிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். த.வெ.க. கொடி அணிந்த வாகனத்தில் வந்த த.வெ.க. வட்டச்செயலாளர் ஜெய், ஒரு லட்சம் ரூபாய் கேட்டு அடாவடி செய்தார். தனது ஆதரவாளரிடம், ‘கத்தியை எடு’ எனக் கூறிய த.வெ.க. நிர்வாகி ஜெய், பொக்லைன் ஆப்பரேட்டரை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்.

•«செங்கல்பட்டு மாவட்டம்–மதுராந்தகத்தை அடுத்த கீழாமூர் கிராமத்தில் வசித்து வந்த முத்தம்மாளிடம் நகையைப் பறித்து கொலை செய்ததாக த.வெ.க. கிளை நிர்வாகி வாசுதேவனை போலீசார் கைது செய்தனர்.

•«வேலூர் மாவட்டம், கணியம்பாடியைச் சேர்ந்த த.வெ.க. ஒன்றிய செயலாளர் விஜயகுமார் செங்கல் சூளையில் ஒரு லட்சம் மாமூல் கேட்டு மிரட்டினார். இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்தவர்கள் மீதே வேலூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகுதான் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வேறு வழியில்லாமல் கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

•«சென்னை அரும்பாக்கம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை த.வெ.க.வைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் பல வருடங்களாக ஆக்கிரமித்து உணவகம் நடத்தி வந்திருக்கிறார். அதை அகற்றச் சொன்ன மாநகராட்சி அதிகாரிகளையும், கட்டுமான நிறுவன ஊழியரையும் தாக்கி இருக்கிறார் குணசேகரன். அவர் மீது அமைந்தகரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

•«கன்னியாகுமரி மாவட்டம் – குலசேகரத்தில் அடகுவைத்த 30 லட்சம் ரூபாய் நகையை திருப்பித் தராமல் கூலித் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் த.வெ.க. பிரமுகர் மீது, தக்கலை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

•«மதுரை – திருப்பரங்குன்றத்தில் மூடப்பட்ட ‘டாஸ்மாக்’ கடை மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாரின் உரிமையாளர் த.வெ.க.வைத் சேர்ந்தவர் என்பதே ‘டாஸ்மாக்’ கடை மீண்டும் திறக்கப்பட்டதற்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

– ‘தூயசக்தி’ விஜய் ஆட்சியில் இருபது நாட்களுக்குள் அவரது கட்சி நிர்வாகிகள் நடத்தியுள்ள அராஜகங்கள் இவை. அராஜகங்கள் ஏற்படாமல் சினிமாவில் தடுப்பாரே, அப்படித் தடுத்தாரா? இல்லை. ‘அப்படித் தடுப்பார்’ என்று நினைத்து வாக்களித்த மக்களைத்தான் த.வெ.க. நிர்வாகிகள் வேட்டையாடி வருகிறார்கள்.

Also Read: “தொடர் பாலியல் வன்முறைகள்.. பெண்கள் பாதுகாப்பில் கோட்டைவிடும் முதல்வர் விஜய்” : முரசொலி விமர்சனம்!