murasoli thalayangam
“ரத்தம் குடிக்க அலையும் கும்பல்” : சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு முரசொலி ஆவேச கண்டனம்!
முரசொலி தலையங்கம் (30-12-2025)
யார் கொடுக்கும் தைரியம் இது?
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள கத்தீட்ரல் மீட்பின்தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். “டெல்லி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் வழிபாட்டில் கலந்து கொண்டேன். இந்த வழிபாடு காலத்தால் அழியாத அன்பு, அமைதி, இரக்கத்தின் செய்தியை பிரதிபலித்தது. கிறிஸ்துமஸ் விழாவின் உணர்வு, நமது சமூகத்தில் நல்லெண்ணம், நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனைப் படிக்கும் போது, பிரதமரின் நல்லிணக்க, நல்லெண்ண உணர்வை நாம் மெச்சத் தோன்றும்.
அதேநேரத்தில்இந்தியாவில் பல மாநிலங்களில் என்ன நடந்தது? கிறிஸ்துமஸ் கொண்டாடிய மக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. பிரதமர் சொன்ன நல்லெண்ணம் எங்கே? நல்லிணக்கம் எங்கே போனது? நல்லிணக்கம் பேசிய பிரதமர், நல்லிணக்கம் கெடும் போது கண்டித்தாரா என்றால் இல்லை.
*சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் கிறிஸ்துமஸ் அமைப்புக்கு எதிராக பா.ஜ.க. ஆதரவு அமைப்புகள் வன்முறையை நடத்தி இருக்கிறார்கள். மேக்னட்டோ வணிக வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் சாதி, மதம் பற்றி கேள்வி கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார்கள். அந்த வளாகம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 'பெரிய எண்ணிக்கையிலான நபர்கள் வந்து இங்குள்ள ஊழியர்களிடம் அடையாள அட்டைகளை வாங்கிப் பார்த்தார்கள். இந்துக்களா, கிறிஸ்தவர்களா என்று கேட்டார்கள். அவர்கள் நடத்திய தாக்குதலில் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.” என்று அந்த வணிக வளாகப் பொறுப்பாளர் பேட்டி அளித்துள்ளார்.
*மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரின் சில பகுதிகளில் கிறிஸ்தவ வழிபாட்டுக் கூட்டங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட கொண்டாட்டத்தில் பார்வையற்ற சிறுமியைக் கேலி செய்து பேசி இருக்கிறார் பா.ஜ.க. பிரமுகர்.
*டெல்லியில் ஒரு பகுதியில் சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்த பெண்களை விரட்டி அடித்திருக்கிறது ஒரு கும்பல்.
*ஒடிசாவில் கிறிஸ்துமஸ் தொப்பிகளை விற்ற ஒருவன் கொடுமைப் படுத்தப்பட்டு அடித்து விரட்டப்பட்டுள்ளான்.
*உத்தரகாண்டில் ஒரு உணவு விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தடுக்கப்பட்டுள்ளது.
*உத்தரப்பிரதேச மாநில அரசு கிறிஸ்துமஸ் நாளில் விடுமுறையை ரத்து செய்து, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளைக் கொண்டாட கல்வி நிலையங்களுக்கு கட்டளை இட்டது.
*கேரளாவில் அஞ்சல் நிலையங்களில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பா.ஜ.க.வுடன் தொடர்புடைய பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீதங்களைப் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்திய- தாகவும், இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை திருவனந்தபுரம் தபால் நிலைய தலைமை அதிகாரி ரத்து செய்ததாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சொல்லி இருக்கிறார். பாலக்காடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சங் பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் சொல்லி இருக்கிறார்.
*அசாமில் பள்ளி ஒன்றில் செய்யப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் அலங்காரங்களை ஒரு கும்பல் புகுந்து சீர்குலைத்துள்ளது. நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். இது தொடர்பாக அசாம் மாநில காவல் துறை அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், “வி.எச்.பி. அமைப்பின் நல்பாரி மாவட்டச் செயலாளர், மாவட்டத் இணைச் செயலாளர், துணைச் செயலாளர், பஜ்ரங் தளம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய நால்வரைக் கைது செய்து உள்ளனர். சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்த அவர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கம் எழுப்பியதுடன் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்தக் கூடாது என்று எச்சரித்தனர். கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்ற கடைகளைக் கொளுத்- தினர்.” என்று சொல்லி இருக்கிறார். இதனை அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா ஒப்புக் கொண்டுள்ளார்.
நாடு எத்தகைய அச்சம் மிகு சூழ்நிலையை பா.ஜ.க., பஜ்ரங் தள், சங் பரிவார் அமைப்புகளால் சந்தித்து வருகிறது என்பதற்கு இவை ஒரு வார எடுத்துக் காட்டுகள் ஆகும். கிறிஸ்துமஸ் நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் என்பதால் ஊடகங்களில் வெளியாகிறது. மற்ற நேரமாக இருந்தால் அந்த மாநிலத்தை விட்டு இவை வெளியில் வராது.
தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவர் ஜார்ஜ் ஆரோக்கியசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அந்த மதத்தினரை மட்டும் பாதிப்பதில்லை. அது இந்திய சமூகத்தின் ஒற்றுமை, மனிதநே- யம், அரசியலமைப்பின் மதச்சார்பின்மை ஆகிய அடிப்படை மதிப்புகளைப் பாதிக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் சிறுபான்மை சமூகங்களின் பயம், பாதுகாப்பற்ற உணர்வு, சட்டத்தின் மீது நம்பிக்கை குறைதல், மதங்களுக்கு இடையிலான உறவுகளில் விரிசல் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றன” என்று சொல்லி இருக்கிறார்கள். இதுதான் உண்மை ஆகும்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், பா.ஜ.க. அதிகம் தலைதூக்கும் மாநிலங்களில் எத்தகைய அச்சம்மிகு சூழல் இருக்கும் என்பதை இவை எடுத்துக் காட்டுகிறது. ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து கலவரத்தை உருவாக்குவதும், அதனை மதத்தைக் காப்பதற்காகச் சொல்லிக் கொள்வதும் பா.ஜ.க. ஆதரவு அமைப்புகளின் பசப்பான வார்த்தைகள் ஆகும்.
தங்களது சுயநலனுக்காக ரத்தம் குடிக்க அலையும் கும்பலாக அது இருக்கிறது என்பதை தமிழ்நாடு உணர்ந்ததைப் போல மற்ற மாநிலங்களும் தெளிவாக உணர வேண்டும்.
இவை அனைத்தும் யார் கொடுக்கும் தைரியத்தால் நடக்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசு கொடுக்கும் தைரியத்தால் தான் நடக்கிறது.
Also Read
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!