murasoli thalayangam

“கனத்த இதயத்தோடு நிறைவேற்றப்பட்ட மசோதா.. இதயமுள்ளவர்கள் கேட்கக் கடவர்” : ஆளுநர் RN.ரவியை சாடிய முரசொலி !

இதயமுள்ளவர்கள்..

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இது வரை எந்த சட்டமுன்வடிவும் இவ்வளவு கனத்த இதயத்தோடு நிறைவேற்றப்பட்டது இல்லை. இணையவழி சூதாட்ட தடை சட்டமுன்வடிவு தான் அந்த ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது.

தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப் படுத்துதல் சட்டமுன்வடிவு – -2022 என்பதை தமிழ்நாடு சட்டமன்றம் இரண்டாவது முறையாக நேற்றைய தினம் நிறைவேற்றி இருக்கிறது. இதனை அறிமுகம் செய்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் தனது உரையைத் தொடங்கும் போதே உருக்கமாகத் தொடங்கினார்கள்.

''மிகவும் கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன்! இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து இதுவரை 41 பேர் தற்கொலை செய்துகொண்ட துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறதே... என்ற வேதனையுடன் தான் எனது உரையை நான் தொடங்குகிறேன்" என்றுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது உரையைத் தொடங்கினார்கள்.

இந்த சட்ட முன்வடிவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கும் போதும், ''இந்த சட்டம் அறிவால் மட்டுமல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அரசியல் காரணங்களில், கொள்கைகளில் நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அப்படி எழுவது இயற்கையானது தான். ஆனால் மனித உயிர்களைப் பலிவாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் இதயமுள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இருக்கவும் கூடாது" என்று உருக்கமாகச் சொன்னார் முதலமைச்சர் அவர்கள்.

ஏனென்றால் இதுவரை எத்தனையோ உயிர்களை ஆன்லைன் சூதாட்டம் பலிவாங்கி இருக்கிறது. திருச்சி ஆனந்த், சென்னை தாம்பரத்தில் வினோத் குமார், மெரினாவில் சுரேஷ், போரூரில் பிரபு, மணலியில் விக்னேஷ் மற்றும் பவானி, செங்குன்றத்தில் தினேஷ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குணசீலன் , தருமபுரி வெங்கடேஷ், நெல்லை பணகுடியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சிவன்ராஜ், தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளத்தைச் சேர்ந்த பிரகாஷ், கோவை வெள்ளலூரைச் சேர்ந்த மதன்குமார், என ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியானோர் எண்ணிக்கை நீண்டுகொண்டே செல்கிறது. ஆனாலும் ஆளுநர் இரவி இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து, நாட்களை இழுத்துக் கொண்டே இருந்தார்.

ஆன்லைன் ரம்மியை தடை செய்து அவசர சட்டம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட நாள் : 26.9.2022

ஆளுநர் ஒப்புதல் அளித்த நாள்: 1.10.2022

அரசிதழில் வெளியிடப்பட்ட நாள்: 3.10.2022

சட்டமுன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாள்: 19.10.2022

ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நாள்: 26.10.2022

அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்ட நாள்: 23.11.2022

அரசு பதில் அனுப்பியநாள்: 24.11.2022

சட்ட அமைச்சர், ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியது : 11.2.2022

அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பிய நாள்: 6.3.2023

மீண்டும் சட்டம் நிறைவேற்றிய நாள்: 23.3.2023

– சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவை 131 நாட்கள் கழித்து திருப்பி அனுப்புகிறார் ஆளுநர். அதுவும், இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை என்கிறார். இதனை விட மோசடி இருக்க முடியுமா? எத்தனையோ மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து இருக்கிறது. அவர்களுக்குத் தெரியாதா?

''அனைத்து வகையான சூதாட்டமும் மாநில பட்டியலில் உள்ளதால் மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றலாம். பல மாநிலங்கள் இத்தகைய சட்டத்தை இயற்றி உள்ளன" என்று கடந்த ஆண்டு 3.8.2022 அன்று நாடாளுமன்றத்தில் சொன்னவர் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

கடந்த வாரத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் கேட்ட கேள்விக்கு ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளிக்கும் போதும் இதனை உறுதி செய்துள்ளார். ''ஆன்லைன் சூதாட்டங்களை தங்கள் வரம்புக்குள் கொண்டுவரத் தேவையான சட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. பொது சூதாட்டச் சட்டம் 1867 இன் படி பெரும்பாலான மாநில அரசுகள் இவற்றை எதிர்கொள்வதற்கு தங்களது சொந்த சட்டத்தை இயற்றி உள்ளன.

பந்தயம், சூதாட்டம் ஆகியவை அரசியலமைப்புச் சட்டத்தின் 7 ஆவது அட்டவணையில் 34 ஆவது பிரிவில் இடம்பெற்றுள்ளது. 7 ஆவது அட்டவணை 34 ஆவது பிரிவில் உள்ளவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை மாநில அரசுகளே இயற்ற முடியும்" என்று சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது ஆளுநர் சொன்ன காரணம், இழுத்தடிப்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட பொய் காரணம் என்று புரியவில்லையா?

இந்த அடிப்படையில்தான் மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று சொல்லி இந்த சட்டமுன்வடிவை முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள். 'எனது மரணம் கடைசியாக இருக்கட்டும்' என்ற சோகக் குரலும், என் குடும்பத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு குடும்பத்துக்கு ஏற்படக் கூடாது' என்ற அழுகுரலும், இனியொரு முறை இந்த மாநிலத்தில் எழக் கூடாது.

எழுமானால், சட்டத்தின் பொருளும் மாநிலத்தின் அதிகாரமும் நீர்த்துப் போனதன் அடையாளமாக ஆகிவிடும்" என்று சொல்லிவிட்டு, ''மனச்சாட்சியை உறங்கச் செய்துவிட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதை பிரகடனமாகவே இந்த மாமன்றத்தில் தெரிவிக்க நான் விரும்புகிறேன்" என்று முழங்கி இருக்கிறார் முதலமைச்சர். இதயமுள்ளவர்கள் கேட்கக் கடவர்!

Also Read: ஆத்திரம் வன்மம் தலைக்கேறி செய்தி போடுகிறார்கள்.. தினமலருக்கு அண்டசராசரமும் ஏன் அரிக்கிறது? - முரசொலி!