murasoli thalayangam

“சமூகநீதித் தத்துவத்துக்கு எதிரான தீர்ப்பு.. 10% இடஒதுக்கீட்டில் 100% ஆபத்து இருக்கிறது” : முரசொலி!

100 சதவிகித ஆபத்து இருக்கிறது!

உயர் வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் பத்து சதவிகித இடஒதுக்கீட்டை வழங்குவதன் மூலமாக சமூகநீதித் தத்துவத்துக்கு மாறாக இருக்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பதனால் மட்டுமே அந்தத் தீர்ப்பை விமர்சிக்கவில்லை. அதனைவிட அதிக ஆபத்துகள் நிறைய அந்தத் தீர்ப்பில் இருக்கிறது.

* இந்தத் தீர்ப்பில், அனைவருக்குமான இடஒதுக்கீட்டுக்கும் வேட்டு இருக்கிறது.

* இந்தத் தீர்ப்பில் பட்டியலின, பழங்குடியினருக்கான சட்டமன்ற நாடாளுமன்றத் தொகுதிகளில் வழங்கப்படும் தனித் தொகுதி முறைக்கும் வேட்டு இருக்கிறது.

பொருளாதார அடிப்படையில் உயர்வகுப்பினருக்கு பத்து சதவிகித இடஒதுக்கீட்டை ஐந்து நீதிபதிகளில் மூவர் ஆதரித்துவிட்டார்கள், இருவர் எதிர்த்து விட்டார்கள் என்று இந்தத் தீர்ப்பை ஒதுக்கிவிட முடியாது. தீர்ப்பு எழுதிய நீதிபதிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சமூகநீதித் தத்துவத்துக்கே எதிரான கருத்துக்களை தங்களது தீர்ப்பில் எழுதி இருக்கிறார்கள்.

“இடஒதுக்கீட்டை காலம் காலமாக தொடர்ந்து கொண்டு இருக்க முடியாது, அதற்கு கால நிர்ணயம் செய்து நிறுத்தி விட வேண்டும்” என்று நீதிபதி பர்த்திவாலா அத்தீர்ப்பில் எழுதி இருக்கிறார்.( பக்கம் 116-- – -117) ‘’.. The idea of Baba Saheb Ambedkar was to bring social harmony by introducing reservation for only ten years. However, it has continued for the past seven decades. Reservation should not continue for an indefinite period of time so as to become a vested interest” என்கிறார் இவர்.

இதோ உச்சநீதிமன்ற நீதிபதி பர்த்திவாலா எழுதுகிறார்...

‘’..... இடஒதுக்கீடு என்பது முடிவல்ல, சமூக மற்றும் பொருளாதார நீதியைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாகும். இடஒதுக்கீட்டை ஒரு தரப்பினர் மட்டுமே ஆதாயம் பெறக்கூடிய வகையில் மாற அனுமதிக்கப்படக்கூடாது. எவ்வாறாயினும், சமூகத்தின் நலிந்த பிரிவினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகியவை பின்தங்கியதற்கான காரணங்களை நீக்குவதில்தான் உண்மையான தீர்வு உள்ளது.

காரணங்களை நீக்கும் இந்த முயற்சியானது சுதந்திரம் பெற்ற உடனேயே, அதாவது ஏறக்குறைய ஏழு தசாப்தங்களுக்கு முன்பு தொடங்கியது, அது இன்னும் தொடர்கிறது. நீண்ட கால வளர்ச்சி மற்றும் கல்வியின் பரவல் ஆகியவை சாதிய வகுப்புகளுக்கு இடையேயான இடைவெளியை கணிசமான அளவிற்குக் குறைத்துள்ளன.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர்களில் அதிக சதவீதத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏற்றுக் கொள்ளக்கூடிய தரத்தை அடைவதால், அவர்கள் சலுகை பெறும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரிடமிருந்து நீக்கப்பட வேண்டும், இதன் மூலம்தான் உண்மையாக உதவி தேவைப்படும் வகுப்பினர் மீது கவனம் செலுத்த முடியும்.

இத்தகைய சூழ்நிலைகளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் முறை, நிர்ணயம் செய்யும் முறைகள் மற்றும் மேலும் மதிப்பாய்வு செய்வது மிகவும் அவசியம். பிற்படுத்தப்பட்டோர் வகைப்பாட்டிற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட அளவு கோல்கள் இன்றைய நிலைமைகளுக்குப் பொருத்தமானதா என்பதைக் கண்டறிய வேண்டும்.

பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே பாபா சாகேப் அம்பேத்கரின் எண்ணம். இருப்பினும், இது கடந்த ஏழு தசாப்தங்களாக தொடர்கிறது. அதுவும் ஒரு தரப்பினர் மட்டுமே ஆதாயம் பெறக்கூடிய வகையில், இடஒதுக்கீடு காலவரையற்ற நிலையாக தொடரக் கூடாது” – என்று எழுதி இருக்கிறார் நீதிபதி பர்த்திவாலா.

இப்படி ஒட்டு மொத்த சமூகநீதிக்கும் வேட்டு வைக்கும் யோசனையை அவர் சொல்லி இருக்கிறார். இன்னொரு நீதிபதியான திரிவேதி எழுதி இருப்பது அதனை விட ஆபத்தானது. பட்டியலின, பழங்குடியினருக்கான நாடாளுமன்ற, சட்டமன்ற தனித்தொகுதிக்கே எதிராக இவர் எழுதி இருக்கிறார். ( பக்கம் 23-–24)

இதோ நீதிபதி திரிவேதி எழுதுகிறார். ‘‘அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் எதைக் கற்பனை செய்தார்களோ மற்றும் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்த வேளையிலும், எதை அடைய விரும்பினார்களோ, அது, இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு கால அவகாசம் இருக்க வேண்டும் என்ற அவர்களது நோக்கம், நமது சுதந்திரத்தின் எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவடையும் இந்தக் காலம் வரை இன்னும் சாதிக்கப்படவில்லை.

இந்தியாவில் இருக்கின்ற இடஒதுக்கீட்டு முறையின் தோற்றத்திற்கு இங்கு நிலவுகிற பழமையான சாதி முறைதான் காரணம் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. பட்டியலிடப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் வரலாற்று அநீதிகளைச் சரிசெய்வதற்கும், அவர்கள் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர் களுடன் போட்டியிடும் வகையில் அவர்களுக்கு என்று ஒரு சமமான வாய்ப்புகளை வழங்குவதற்காகத்தான் இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப் பட்டது.

எவ்வாறாயினும், நமது சுதந்திரத்தின் எழுபத்தைந்து ஆண்டுகளின் முடிவில், ஒட்டுமொத்தச் சமூகத்தின் பிரதான நலனுக்காக இடஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அவ்வாறு செய்யும் பட்சத்தில் நமது அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னோக்கிய நகர்வாக இருக்கும்.

அரசியலமைப்பின் 334வது பிரிவின்படி, மக்களவையிலும், மாநிலங்களின் சட்டப் பேரவைகளிலும் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு என நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடு உரிமைகள், அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட திலிருந்து 80 ஆண்டுகளில் காலாவதி யாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆங்கிலோ- – இந்திய சமூகத்தினரின் பிரதிநிதித்துவத்துக்கான நியமனங்கள் பாராளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப் பேரவைகளில் ஏற்கனவே 104 வது சட்டத்தின் மூலம் நிறுத்தப்பட்டு விட்டது. (திருத்தம் w.e.f. 25.01.2020.)

எனவே, இதே போன்ற திருத்தம் மற்றும் காலக்கெடு பரிந்துரைக்கப் பட்டால், அரசியலமைப்பின் பிரிவு 15 மற்றும் பிரிவு 16 இல் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடுகள் மற்றும் பிரதிநிதித்துவங்கள் தொடர்பான அனைத்தும் முடிவுக்கு வரும். அது சமத்துவ, சாதியற்ற மற்றும் வர்க்கமற்ற சமுதாயத்திற்கு வழிவகுக்கும்”

– என்று எழுதி இருக்கிறார் நீதிபதி திரிவேதி. ‘(Therefore, similar time limit if prescribed, for the special provisions in respect of the reservations and representations provided in Article 15 and Article 16 of the Constitution) இதை எல்லாம் செய்துவிட்டீர்கள் என்றால் எதற்காக 15, 16 ஆகிய பிரிவுகள் என்பதே இதன் உள்ளடக்கம் ஆகும்.

எவ்வளவு பெரிய ஆபத்து இந்தத் தீர்ப்பில் இருக்கிறது பார்த்தீர்களா?

10 சதவிகித ஆபத்து அல்ல ... 100 சதவிகித ஆபத்து இருக்கிறது!

Also Read: உயர்ஜாதி ‘பணக்காரர்களுக்கு’ இடஒதுக்கீடு: தினமணியின் திருகு வேலைக்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த முரசொலி!