murasoli thalayangam

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சமூகநீதிக் கொள்கை: வரலாறு தெரியாதவர்களுக்கு முரசொலி பதிலடி!

தி.மு.க.வுக்கு முன்பே இருந்ததா?

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நிறைவேற்றப்பட்ட சமூகநீதிச் சட்டம்தான், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற மகத்தான சட்டம் ஆகும். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்தபிறகு முறைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற 28 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார். பெண் ஒருவரும் அர்ச்சகர் ஆகி இருக்கிறார். சமூகநீதி வரலாற்றில் மாபெரும் சாதனை இது.

இதனை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் குறுக்குச்சால் ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். நாளிதழ் ஒன்று, ஒரு பக்க அளவில் இது பற்றி ஒரு புகைப்படக் கட்டுரையை தீட்டி இருக்கிறது. அதற்கு அவர்கள் வைத்துள்ள தலைப்பு: ‘’ஈ.வெ.ரா.வும், தி.மு.க.வும் பிறப்பதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்தான் - வரலாற்றைத் திரிக்கும் திராவிட மாடல்கள் “ என்று தலைப்பு தந்துள்ளது.

அவர்களுக்கு கோவில் வரலாறும் தெரியவில்லை, சட்ட வரலாறும் தெரியவில்லை என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக இருந்து பூசனை செய்து வந்த கோவில்களில் பெரும்பாலான கோவில்களை வேதியர்கள் கைப்பற்றியதால்தான் இந்தப் பிரச்சினையே எழுகிறது. இப்படிக் கைப்பற்றிக் கொண்டவர்கள் மற்றவர்களை உள்ளே வரத் தடுத்ததால்தான் இந்தப் பிரச்சினையே எழுந்தது. இப்படி தடுக்கப்பட்டவர்கள் தனியாக தங்களுக்குத் தேவையான கோவில்களை தாங்களே கட்டிக் கொண்டார்கள் என்பதும் தமிழ்நாட்டுக் கோவில்களின் வரலாறு.

இப்படித் தடுக்கப்பட்டவர்கள் சேர்ந்து 200 ஆண்டுகளாக கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி வந்தார்கள் என்பதும் வரலாறு. இதன் கூட்டு முயற்சியாகத்தான் 1925 முதல் 1931 வரை தமிழ்நாட்டின் பல்வேறு கோவில்களில் கோவில் நுழைவுப் போராட்டங்களை சுயமரியாதை இயக்கம் நடத்தியது. இவர்கள் தடுக்கப்பட்டார்கள். கைது செய்யப்பட்டார்கள். வழக்குகளைச் சந்தித்தார்கள்.

1927 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூன்றாவது அரசியல் மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்கள் முன்னின்று நடத்தி சொற்பெருக்கு ஆற்றிய அந்த மாநாட்டுத் தீர்மானம் இதுதான்:

“ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையைச் சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்விஷயத்திலுள்ள பிறப்புரிமையைப் பிடுங்கிக் கொண்டதனால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்யவும், அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச் செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்யவேண்டும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது” (குடி அரசு 13.11.1927) என்பது அந்தத் தீர்மானம்.

ஈ.வெ.ரா. பிறப்பதற்கு முன்பே அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக இருக்கிறார்கள் என்றால் இந்தத் தீர்மானம் எதற்கு?

தி.மு.க. தோன்றுவதற்கு முன்பே அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக இருந்திருக்கிறார்கள் என்றால், ‘தமிழ்நாடு 1970 ஆம் ஆண்டு இந்து சமய அறக்கட்டளை திருத்த மசோதா 15/1970 ‘ சட்டத்தை சட்டமன்றத்தில் எதற்காக கொண்டு வந்திருக்க வேண்டும்? இந்த சட்டம் சரியா தவறா என்று உச்சநீதிமன்றம் எதற்காக விசாரணை நடத்த வேண்டும்? இது உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாதா?

உரிய கல்வித் தகுதி கொண்டவர் அர்ச்சகர் ஆகலாம், சாதி - வகுப்பு வேறுபாடு இன்றி அர்ச்சகர் ஆகலாம் என்பதுதான் சட்டம். இதற்கும் ஆகமத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

நீதியரசர் ஏ.கே.ராஜன் ஆணையம் வழங்கிய அறிக்கையில் இது குறித்து தெளிவாக உள்ளது. பூஜைகள் எந்த முறைப்படி செய்யலாம் என்று சொல்பவைதான் சில ஆகமங்கள்.

“அர்ச்சகர்கள் அனைவரும் கோயிலின் பணியாளர்கள். எனவே, அவர்களுக்கான நடைமுறைகளை மாற்றுவதற்கு அரசுக்கு உரிமை உண்டு. சமயக் கோட்பாடுகள் மட்டுமே அரசால் மாற்றப்படக்கூடாதது.

கால பூசைகள் (ஆறு கால பூசைகள்), அபிஷேகம், அலங்காரம், கும்பாபிஷேகம் செய்கின்ற முறைகள் போன்றவைதான் சமயச் சடங்குகள் ஆகும். இவற்றைத்தான் சட்டத்தால் மாற்ற இயலாது. உதாரணமாக ஆறு கால பூசைகள் நடைபெற்று வரும் கோயில்களில் சட்டத்தால் நான்கு காலங்களாக மாற்றப்பட்டாலோ, அபிஷேக, அலங்கார முறைகளை மாற்றினாலோ அல்லது கும்பாபிஷேகத்தின் போது செய்யப்படுகின்ற சடங்கு, சம்பிரதாயங்களைச் சட்டத்தின் மூலம் மாற்றி அமைத்தாலோதான் அது அரசியலமைப்புச் சட்டத்தின் 25,26 விதிக்கு முரணானது” என்று ஏ.கே.ராஜன் ஆணையம் தெளிவுபடுத்தி இருந்தது. பூசனை முறைகளில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. செய்யவும் செய்யாது.

எனவே, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சமூகநீதிக் கொள்கை. அதனை ஆதரிப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். எதிர்ப்பவர்கள்தான் ஊசலாட்டத்துடன் இருக்கிறார்கள். ஆமாம் எதிர்க்கிறோம் என்று வராமல் , ‘காலம் காலமாக அனைத்துச் சாதியினரும் பூஜை செய்கிறார்களே’ என்று திசை திருப்புவது கூடாது. காலம் காலமாக இருக்கிறது என்றால், அதனை எதற்காக எதிர்க்க வேண்டும்?

பழுத்த ஆத்திகர் - ஒரு நாளைக்கு ஆறு வேளை வழிபாடு செய்யும் ஆத்திகர் - சுதந்திர இந்தியாவின் முதல் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி அவர்கள் அறநிலைய, மடங்களின் சீர்திருத்த சட்டத்தைக் கொண்டு வந்தபோது கடுமையாக இதே வேதியர்களால் எதிர்க்கப்பட்டார். சட்டமன்றத்தில் பேசும் போது, “பாமர மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைமையை உயர்த்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்க முற்படும் போதெல்லாம் மதத்துக்கு ஆபத்து என்ற கூக்குரல் துர்ப்பாக்கியவசமாக நம் நாட்டில் கிளம்புவது சகஜமாகி விட்டது” என்று 1949 ஆம் ஆண்டு பேசினார். அதுதான் இன்று வரை நடக்கிறது. ஆத்திகர் ஓமந்தூராரே அத்தகைய எதிர்ப்பை எதிர்கொண்டார்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை எதிர்த்துக் கொண்டே, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகத் தான் இருக்கிறார்கள் என்றும் சொல்வது, பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன ‘பேச நா இரண்டுடையாய் போற்றி’ என்பதையே நினைவூட்டுகிறது!

Also Read: “கூட்டாட்சியை உருவாக்க வலுவான கூட்டணிகளால்தான் முடியும்” : கூட்டணி முக்கியத்துவத்தை வலியுறுத்திய முரசொலி!