murasoli thalayangam

தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 3வது இடத்தில் ‘தமிழ்நாடு’: முதலமைச்சருக்கு முரசொலி பாராட்டு!

தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14 ஆவது இடத்தில் இருந்து 3 ஆவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது தமிழ்நாடு. இந்த முன்னேற்றம் என்பது மிகச் சாதாரணமாக நடந்து விடவில்லை!

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் நடை முறைகளை எளிமைப்படுத்திய தொழில் துறை அமைச்சர் மற்றும் அவரது குழுவினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள். முதலீடு செய்வதற்கான சிறந்த மாநிலங்கள் பட்டியலில், 14-வது இடத்தில் இருந்து 3-வது இடத்தை தமிழ்நாடு அடைந்துள்ள நிலையில், தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்திய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது குழுவினரை பாராட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அவர்களோடு சேர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பாராட்டுதலுக்கு உரியவராகிறார்.

பத்தாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் தொழில் துறை அதலபாதாளத்தில் இருந்தது. அதனை மீட்டெடுக்கும் முயற்சியை ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து முதலமைச்சர் அவர்கள் தொடங்கிவிட்டார்கள். இதுவரை 5 தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துள்ளது. இதன் மூலமாக அடைந்த பயன்தான் இது.

எந்த அடிப்படையில் இந்தப் புள்ளிவிபரம் எடுக்கப்படுகிறது என்பதைப் பார்த்தால் தமிழ்நாடு எப்படி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பதை அறியலாம். தொழில் சீர்திருத்த செயல்திட்டம் என்பது ஒற்றைச்சாளர நடைமுறை, தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள், வரி சீர்திருத்தம், கட்டுமான அனுமதி உள்ளிட்ட 301 சீர்திருத்த அம்சங்களை உள்ளடக்கியது. இவற்றை செயல்படுத்துவதில் மாநிலங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு மதிப்பீடு பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி, மதிப்பீட்டு அறிக்கையை ஒன்றிய வர்த்தக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், எளிதாக தொழில் செய்யும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் முதன்மையானதாக 7 மாநிலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, குஜராத், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்கள் முதன்மையான மாநிலங்களாக திகழ்கின்றன.

மத்தியப்பிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட், இமாச்சல், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் தொழில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் பின்தங்கியுள்ளன. தமிழகத்தில் ஜூலை 2021 முதல் 94,975 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2.26 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் 132 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டு காலத்தில் கையெழுத்தான 132 திட்டங்களில், 78 தொழில் திட்டங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளன. 29 திட்டங்கள் நிலம் அடையாளம் காணும் நிலையிலும், 25 திட்டங்கள், திட்டமிடுதல் (planning) நிலையிலும் உள்ளன. தொழில் நுட்ப நிறுவனங்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, திட்டங்களை நிறுவுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளையும் அரசின் தொழில் துறை தொடர்ச்சியாக இறங்கி வருகிறது.

புதிய புதிய தொழில்களை ஈர்ப்பதாக தமிழக அரசு தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஓராண்டில், செமி-கண்டக்டர்கள், மின் வாகனங்கள், லித்தியம்-அயன் பேட்டரிகள், ஒருங்கிணைந்த சூரிய ஒளி மின்னழுத்திகள் (Solar Photovoltalc) உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் (Green Hydrogen) போன்ற துறைகள் சார்ந்த திட்டங்கள், தமிழ் நாட்டில் முதலீடுகளை மேற் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.

உலகளாவிய நடவடிக்கைகளை நமது தொழில் துறை செய்து வருகிறது. முதலமைச்சர் தலைமையில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஒரு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. தென் கொரியாவில் நடைபெற்ற மின்னணு வர்த்தக கண்காட்சியில் பங்கேற்கவும், கொரிய முதலீட்டாளர்களை சந்திக்கவும் ஒரு உயர் மட்டக்குழு கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டது.

டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இப்படி ஒரு கூட்டத்துக்கு தமிழ்நாடு அழைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஹனோவர் மெஸ்ஸேவில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய உற்பத்தி மாநாட்டில், தமிழ்நாடு பங்கேற்றது. பிராங்பர்ட்டில் நடந்த டெக்டெக்ஸ்டில் அண்ட் டெக்ஸ் பிராசஸ், தி ஹெய்ம் டெக்ஸ்டில் (Techtextil and Texprocess, the Heimtextil) என்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் குழுவுடன் இணைந்து நமது குழுவும் பங்கேற்றது. இவை அனைத்தும் சேர்ந்துதான் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

இதற்கு தேவையான அறிவுத்திறனை உருவாக்க ‘நான் முதல்வன்' திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். ஆண்டுதோறும் மாநிலம் முழுவதிலும் உள்ள சுமார் 10 இலட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி, அவர்களுக்கு வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்து, அவர்களின் திறமையை அவர்களுக்கு உணர வைத்து, அதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவே நன்மை பெற்றிடும் வகையில், இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்துவரும் தொழில் நுட்ப மாற்றங்கள் மற்றும் நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி (Industry 4.0)க்கு ஏற்ப, நமது இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழிலகங்களின் திறனை மேம்படுத்துவதற்காகவும், தயார் நிலைப்படுத்துவதற்காகவும் திறன்மிகு மையங்கள் (Centres of Excelence) மற்றும் தொழில் புத்தாக்க மையங்களைத் (Industrial Innovation Centres) முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்துள்ளார்கள்.

துறையின் பெயரை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத் துறை என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெயர் மட்டுமல்ல தமிழ்நாட்டின் முகத்தையே மாற்றி அமைத்துக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர்!

Also Read: “பக்கோடா பழனிசாமி கவனத்திற்கு.. திராவிட மாடல் குறித்துப் பேச அருகதை இல்லை”: EPS பிழிந்தெடுத்த முரசொலி !