M K Stalin
“அன்புக் குழந்தைகளே.. பதற்றமின்றி தேர்வை அணுகுங்கள்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி பின்வருமாறு,
தமிழ்நாட்டில் மாணவச் செல்வங்களுக்கான மேல்நிலை பொதுத்தேர்வு 02.03.2026 அன்று முதலும், பத்தாம் வகுப்புத் பொதுத்தேர்வு 11.03.2026 அன்று முதலும் தொடங்க இருக்கிறது. மேல்நிலைத் தேர்வை 7,99,692 மாணவ மாணவியரும் பத்தாம் வகுப்புத் தேர்வை 8,82,806 மாணவ, மாணவியரும் எழுத உள்ளனர்.
உயர்கல்வியே எங்கள் இலக்கு என்னும் உறுதியோடு ஆண்டு முழுவதும் ஊக்கத்தோடு படித்து உங்கள் குறிக்கோளின் நுழைவு வாயிலான மேல்நிலை / பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளீர்கள். கருத்தாய்ப் படித்து கல்விக் கடமையாற்றி அதன் பலன் கனியும் காலமிது.
“என்னால் முடியும்” என்னும் மந்திரச் சொல்லை மனதில் பதியுங்கள். அறிவில் தெளிவும், மனதில் துணிவும், செயலில் உறுதியும் இருந்தால் தேர்வு பற்றிய அச்சம் தேவையில்லை. தேர்வுகளை முனைப்புடனும், முழு கவனத்துடனும் எழுதுங்கள்.
இக்காலத்தில் உங்கள் உடல் நலனும் மன நலனும் மிகவும் அவசியமானது. சத்தான உணவும், போதுமான தூக்கமும், மன அமைதியும் தேர்வுகளை எதிர்கொள்ளத் துணை நிற்கும். நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும், பதற்றமின்றியும் தேர்வை அணுகுங்கள். உங்கள் இலட்சியப் பாதையில் சிறிது தளர்ச்சி வந்தாலும் பதற்றமின்றி முயற்சி செய்யுங்கள்.
உழைப்பிற்கு ஏற்ற பலனை நிச்சயம் அடைவீர்கள். ஒவ்வொருவருக்குமான வாய்ப்பு பரந்து விரிந்து கிடக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் உயர் கல்வி இலக்கினை அடைய புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற சிறப்பான திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
அன்புக் குழந்தைகளே! மனவலிமையும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் உங்கள் வெற்றிப்பாதைக்கான படிக்கட்டுகள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். உங்கள் உயர்வு தமிழ்நாட்டின் வளர்ச்சி.
தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களாகிய நீங்கள் அனைவரும் சிறப்பான வெற்றி பெற என் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
Also Read
-
பரபரப்பான சென்னை.. டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம்.. காவல்துறையின் செயலால் அதிர்ச்சி!
-
“சேலம் இரும்பாலையை நவீனப்படுத்த புதிய முதலீடுகள் செய்யப்படுமா?” - மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
“அச்சுறுத்தல், கைதுகளுக்கு திமுக-வினர் அஞ்ச மாட்டார்கள்.. அனைத்திற்கும் தயார்” - கனிமொழி எம்.பி!
-
“பத்திரிகையின் நடுப்பக்கம் ‘விஜய்யின்’ தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது!” : மு.க.ஸ்டாலின் பதிவு!
-
“இது த.வெ.க.வின் சர்வாதிகாரம்!” : கருத்து வேறுபாடுகளை கைதுகளால் முடக்கும் அரசுக்கு ‘தி இந்து’ கண்டனம்!