M K Stalin
“கதராடைகளை அணிந்திடுவோம்! நெசவாளர் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திடுவோம்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் விழா நாளை (அக்.2) கொண்டாடவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அண்ணல் காந்தியடிகள் பிறந்த நன்னாளில் அவரை நினைவு கூர்ந்திடும் வகையில் கதராடைகளை உடுத்துவதே அவருக்கு நாம் செய்திடும் மிகப் பெரிய அஞ்சலி ஆகும்." என்று வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :-
கதராடைகளை அணிந்திடுவோம் !
நெசவாளர் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திடுவோம் !!
அந்நிய நாட்டுத் துணிகளைப் புறக்கணித்து, இந்தியர்களாகிய நாம் அனைவரும் கதர் ஆடைகளை அணிந்திட வேண்டும் என்பது அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் வாழ்நாள் கொள்கையாகும்.
”ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற பேரறிஞர் அண்ணாவின் தாரக மந்திரத்தினை ஏற்று, கிராமப்புற நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பளித்து அவர்களின் வாழ்வினில் ஒளியேற்றிடத் தமிழ்நாடு அரசு, கதர் கிராமத் தொழில் வாரியத்தின் வாயிலாகப் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நவீன கால நாகரிகத்திற்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளில் கதராடைகள் மற்றும் பட்டு ரகங்களை உற்பத்தி செய்திட வணிக அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசு, நூற்போர் மற்றும் நெசவாளர்கள் பெருமக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில், கதர் இரகங்களுக்கு ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியினை வழங்கி வருகிறது.
அண்ணல் காந்தியடிகள் பிறந்த நன்னாளில் அவரை நினைவு கூர்ந்திடும் வகையில் கதராடைகளை உடுத்துவதே அவருக்கு நாம் செய்திடும் மிகப் பெரிய அஞ்சலி ஆகும்.
அண்ணல் காந்தியடிகளின் 157-ஆவது பிறந்த நாள் (02.10.2025) விழாவினை நாம் கொண்டாடும் வேளையில், அவரது கனவு மெய்ப்படவும், கதர்த் தொழிலைச் செழிக்கச் செய்யவும், நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வு மேம்படவும், மாணவ - மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்கள், பொதுமக்கள் அனைவரும் அதிகளவில் கதர் ஆடைகளை வாங்கிப் பயன்படுத்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
"சோதனைகளைத் தாண்டிசுதந்திரம் அடைந்தோம்; கதராடை அணிந்து காந்தியத்தைப் போற்றுவோம்; கதர் வளர்ச்சிக்காகக் கைகோர்ப்போம்'
Also Read
-
கல்வி உரிமைச் சட்டம் (RTE)) மாணவர் சேர்க்கை தொடக்கம் : யார் யாருக்கு முன்னுரிமை - முழு தகவல் இங்கே!
-
காந்தியின் சிலையை தொடுவதற்கே அருகதை அற்றக் கூட்டம் : காவி ஆடை - வைகோ ஆவேசம்!
-
“மழைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் நெல் கொள்முதல் செய்திட வேண்டும்!” : முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
“RSS-உடன் தொடர்பு? விஜயை சுற்றி அனைவரும் பாஜக பயிற்சி பட்டறையில் பயின்றவர்கள்” -திருமாவளவன் MP விமர்சனம்!
-
”திராவிட மாடல் அரசு மீது காழ்ப்புணர்வுடன் குற்றச்சாட்டு வைக்கும் ஆர்.என்.ரவி” : வைகோ கண்டனம்!