M K Stalin

“தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான Umagine TN மாநாடு!” : இரு நாள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் (ஜனவரி 9,10) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடத்தப்படும் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Umagine TN மாநாட்டில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக அளவில் மனித வளத்திற்கு முன்னோடியாக தமிழ்நாடு செயல்பட திட்டங்களை வகுத்து வருகிறார். அதற்கு எடுத்துக்காட்டு தான், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் 25 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பத்திற்கென்று தனித் துறையை உருவாக்கி, அதன் வழி கட்டமைக்கப்பட்ட Tidel Park இந்திய அளவில் இன்றளவும் சிறப்புக்குரியதாய் அமைந்துள்ளது. அந்த வழித்தடத்தில், தற்போதைய முதலமைச்சர் பெருமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறார்” என்றார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு குறையாது, அதிகரிக்க தான் செய்யும் என்பதன் அடிப்படையில் தான் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முன்னெடுத்திருக்கிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள். இந்த மாநாடு தொழில்நுட்பம் தொடர்பானது மட்டுமல்ல, இது தொலைநோக்கு கொண்ட மாநாடு. தமிழ்நாட்டின் நீடித்த மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் மாநாடு.

புத்தாக்க மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. வணிகத்தையும், தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் விதத்தில், மற்றவர்களை விட நாம் ஒரு அடி மேலே தான் இருக்கிறோம்.

செயற்கை நுண்ணறிவு (AI), மின்வாகன உற்பத்தி மற்றும் வளரும் தொழில்நுட்பங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிற முன்னெடுப்புகளை தமிழ்நாடு மேற்கொண்டு வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, திராவிட மாடல் ஆட்சியில் GCC (Global Capability Centre) அதிகரிப்பு அமைந்துள்ளது” என்றார்.

Also Read: தமிழ்நாடு வளர்வதை ஆளுநர் ரவி விரும்பவில்லை - உரையை வாசிக்க மனமில்லை : முரசொலி தலையங்கம்!