M K Stalin

"பாஜகவை எப்போதும் எதிர்ப்போம்.. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" -மீண்டும் உறுதிப்பட கூறிய முதலமைச்சர் !

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ், இடதுசாரிகள்,விடுதலை சிறுத்தைகள் உள்ளிய கருத்தியல் ரீதியான தோழமை கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் வடமாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தினாலும் தமிழ்நாடு புதுவையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி 40க்கு 39 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது.

அதன்பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதே மதசார்பற்ற கூட்டணியை அமைந்த அவர் அதிலும் பெருவெற்றிபெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் திமுக எதிர்ப்பாளர்கள் வழக்கம் போல திமுகவை விமர்சிக்க தொடங்கினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என தொடர்ந்து கூறி வந்தனர். எனினும் பல மேடைகளில் தனது சனாதன எதிர்ப்பையும், பாஜக எதிர்ப்பையும் முதலமைச்சர் ஸ்டாலின் பலமுறை உறுதிப்படுத்தி வந்த நிலையிலும், இதுபோன்ற கருத்துக்கள் தொடர்ந்து வந்தன.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது தனது அரசின் திட்டங்கள், கொள்கைகள் குறித்த கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய பதிலளித்தார்.

அதன்பின்னர் கேள்வி தேர்தல் கூட்டணி குறித்து சென்றது. அப்போது நெறியாளர் தேர்தல் கூட்டணியில் பாஜகவோடு எந்த சமரசமும் இல்லையா அதை எதிர்த்து நிற்பதுதான் உங்கள் முடிவா என கேள்வி எழுப்பினார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "அதுல உங்களுக்கு என்ன சந்தேகம்? சந்தேகப்படவேண்டிய எந்த அவசியமும் இல்லை" என்று பதிலளித்தார். இதன்மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Also Read: “கூட்டாட்சியை உருவாக்க வலுவான கூட்டணிகளால்தான் முடியும்” : கூட்டணி முக்கியத்துவத்தை வலியுறுத்திய முரசொலி!