M K Stalin

“தேர்தல் முடிவுகள் வந்த பிறகு மாவட்டந்தோறும் வெற்றி விழாவில் பங்கேற்பேன்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தி.மு.கழக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை - தமிழ்ச்செல்வி அவர்களின் புதல்வர் கலை கதிரவன் - சந்தியா பிரசாத் இணையேற்பு விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

இந்த இணையேற்பு விழாவை தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். தி.மு.கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மணமக்களை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மிசாவில் கைதாகி ஓராண்டு சிறைவாசத்திற்குப் பின்னர் விடுதலையாகி வரும்போது அன்பகம் கலை எனக்கு அறிமுகமானார். அன்று முதல் ஏறத்தாழ 47 ஆண்டுகாலமாக எந்தச் சூழலிலும் என்னுடனே இருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளிவரவுள்ள நிலையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற உள்ளோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கொரோனா பரவலால் தேர்தலில் ஒரு இடத்தில் கூட நேரடி பரப்புரையை நான் மேற்கொள்ளவில்லை. மக்களை சந்திக்க எனக்கு தைரியம் இல்லை என சிலர் கூறிவருகின்றனர்.

கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகவே காணொலி வாயிலாக பரப்புரை மேற்கொண்டேன். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு மாவட்டம்தோறும் வெற்றி விழா கூட்டத்தில் பங்கேற்பேன்.” எனத் தெரிவித்தார்.

Also Read: “21 மாநகராட்சிகளிலும் தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெறும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!