M K Stalin
“சுய சுகாதார பாதுகாப்புடன் தியாகப் பெருநாளைக் கொண்டாடுங்கள்” - மு.க.ஸ்டாலின் பக்ரீத் தின வாழ்த்து!
இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், “எழுச்சியுடன் கொண்டாடப்படும் - தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயபூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக முக்கியமான இந்தப் பண்டிகை தருணத்தில் - தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற்று - நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இஸ்லாமியப் பெருமக்களின் முக்கியக் கடமைகள் ஐந்து! அவற்றுள், மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கடமையின்- மிக முக்கிய அங்கம் ; ஏழைகளிடம் கருணை காட்டுவதும், அவர்களுக்குப் பொருளுதவி வழங்குவதுமாகும். அந்தக் கடமையை காலம் காலமாக, இஸ்லாமியப் பெருமக்கள் தங்களின் வாழ்வில் ஒரு அங்கமாகக் கருதி நிறைவேற்றி வருகிறார்கள் என்பது போற்றுதலுக்குரியது.
“ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்- பிறகு நண்பர்கள்- அடுத்துதான் தங்களுக்கு” என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து- பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும்- மனித நேயத்தையும் இஸ்லாமியப் பெருமக்கள் வெளிப்படுத்தும் விதமாக, பக்ரீத் பண்டிகை தினத்தன்று ஏழை எளியவர்களுக்கு உதவிகளை வாரி வழங்குகிறார்கள்.
“எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்”, “அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்” என்ற இரண்டும் இஸ்லாமிய மக்களின் அசையாச் சொத்துக்களாக என்றும் இருந்து வருகின்றன.
நபிகள் நாயகம் அளித்த அந்த போதனைகள், தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உன்னதமான நோக்கங்கள் என்பதை உணர்ந்துள்ள அவர்கள், அதன் வழி நின்று- அடி பிறழாமல் பின்பற்றி- இந்த பக்ரீத் பண்டிகையை வருடந்தோறும் கொண்டாடுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.
“சிறப்புத் தொழுகை, ஈகை” ஆகிய இரண்டையும் பக்ரீத் பண்டிகை தினத்தில் “இரு கண்களாக” பாவித்து- நபிகள் நாயகத்தின் போதனைகளுக்கு சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும், இந்தத் தருணத்திற்குரிய சுய சுகாதாரப் பாதுகாப்புகளுடனும் கொண்டாடிட வேண்டும் என்று வேண்டி, மீண்டுமொருமுறை எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!