M K Stalin

“வலதுசாரி சக்திகளுக்கு எதிராக பகுத்தறிவை ஆயுதமாக கொண்டு போராடுபவர்” - மு.க.ஸ்டாலினுக்கு சி.பி.ஐ வாழ்த்து!

உடன்பிறப்புகளின் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை 67வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். அதனையொட்டி, அவருக்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், “தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், அகவை 67-ல் அடியெடுத்து வைக்கும் இனிய நாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்.

நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு தளங்களில் வகுப்புவாத வலதுசாரி சக்திகளுக்கு எதிராக பகுத்தறிவு கருத்துகளை ஆயுதமாகக் கொண்டு உறுதியாக போராடி வருபவர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியைத் தோற்கடித்தவர். இவரது பரந்துபட்ட சிந்தனையும் ஜனநாயக உணர்வும் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க தலைவர் பொறுப்பில் பல சாதனைகள் படைத்திட, அவர் நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வாழ்த்துகிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.