M K Stalin

‘எடப்பாடியை சிறைக்கு அனுப்பாமல், நான் ஓயமாட்டேன்’ - மொழிப்போர் தியாகிகள் விழாவில் மு.க ஸ்டாலின் சூளுரை !

தமிழகத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக நீண்ட நெடிய போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களில் சிலர் சிறைக் கொடுமை தாங்காமல் உயிரிழந்தனர். ஜனவரி 25 1965ம் ஆண்டு முதல் மொழிப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுகூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.

அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “பள்ளி பருவத்திலேயே தமிழ் கொடியை கையில் ஏந்தி திருவாரூர் வீதிகளில் போராட்டம் ஈடுபட்டார் தலைவர் கலைஞர். 1938-ம் ஆண்டு 13 தமிழ்கொடியை தாங்கிய தலைவர் கலைஞர் தனது 94 வயது வரை அதனைத் தாங்கிப் பிடித்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மயிலாடுதுறையில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட நமது வேட்பாளர் 2,61,315 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். அதேபோல உள்ளாட்சித் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைக் கொடுத்துள்ளீர்கள். இந்த இரண்டு தேர்தல் வெற்றியும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வெற்றியாகும். அந்த வெற்றியை பெற்றேத் தீர்வோம் என மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாளில் உறுதியேற்போம்.

மொழிபோர் தியாகிகள் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்றும், எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்று எவருக்கும் தெரியாது. அவர்கள் அனைவரும் தமிழ்தாய் புதல்வர்கள். அதனால் தான் அவர்களின் தியாகத்திற்கு தங்களின் வணக்கத்தை ஆண்டுதோறும் செலுத்தி வருகின்றோம்.

உதாரணமாக மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கர்கா சாட்டர்ஜி என்ற ஆராய்ச்சியாளர், ”மேற்குவங்காளத்தில் தலைவர் கலைஞர் போல் ஒருவர் இல்லையே, அப்படி இருந்திருந்தால் எங்கள் மாநிலத்திலும் வலுவான இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியிருப்போம்” என ஒரு கட்டுரை எழுதி புகழாரம் சூட்டியுள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் போராடிய போராட்டம் இன்றுவரைத் தொடர்கிறது. பா.ஜ.க ஆட்சி வந்ததில் இருந்து இந்தியை திணிக்கும் முயற்சியை தொடந்து செய்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறார்கள். இதனை எதிர்த்து தி.மு.க குரல் கொடுத்தது. ஆனால் அ.தி.மு.க வாய்திறக்கவில்லை. இதன்மூலம் தமிழக முதல்வர் பா.ஜ.கவிற்கு பாதம் தாங்குகிறார்.

அதேபோல் தமிழ் வளர்ச்சித் துறைக்கு அமைச்சராக இருக்கும் மா.பா.பாண்டியராஜன், ஒரு ஜோக்கர் . அவர் தே.மு.தி.கவில் இருக்கும் போது சட்டமன்றத்தில் பேசும் போது எதோ தகவலோடு பேசுகிறார் என நினைத்திருக்கிறேன். ஆனால் தற்போது அ.தி.மு.கவில் இணைந்து அமைச்சர் ஆனபிறகு எதையாவது பேசி திரிகிறார். அதுமட்டுமின்றி அவர் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சராக இல்லாமல் இந்தி மற்றும் சமஸ்கிருத வளர்ச்சி துறை அமைச்சராக செயல்படுகிறார்.

இந்த ஆட்சியின் முதல்வர் எடப்பாடிக்கு மக்கள் பற்றி எந்த பற்றும் கிடையாது. அவருக்கு இருக்கும் பற்று, பணத்தின் மீதுதான். பணத்திற்காக மாநிலத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் முதல்வர் எடப்பாடி இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியைக் கொடுப்பதாக பேசுவது வெட்கக்கேடானது.

அதுமட்டுமன்றி, டெண்டர் விடுவதில் அ.தி.மு.க முறைகேட்டில் ஈடுபடுவதாக நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர்புடையவர் முதல்வராக இருப்பதால் நீதிமன்றம் விசாரித்தால் உண்மைகள் வெளிவர வாய்ப்பில்லாமல் போய்விடும் எனவே இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை சி.பி.ஐ விசாரணை சந்திப்பதற்கு பதிலாக டெல்லிக்குச் சென்று சி.பி.ஐ விசாரணைக்கூடாது என தடை உத்தரவை பெற்றுள்ளார். மாநிலத்தில் பல பகுதியில் நெடுஞ்சாலை துறையின் மூலம் ஊழல் நடந்துள்ளது. அதுவும் 3 ஆயிரம் கோடி ஊழல் என போடப்பட்ட வழக்கை சந்திக்கவில்லை. ஒருவேளை முறையாக சி.பி.ஐ விசாரித்தால் எடப்பாடி முதல்வராக இருக்கமாட்டார், சிறையில் இருந்திருப்பார்.

இதனை இப்போது விட்டாலும் தி.மு.க ஆட்சி வந்ததும் விடமாட்டோம். முதல்வர் உட்பட ஊழலில் ஈடுபட்ட அனைவரையும் விசாரணைக் கூண்டில் அடைப்போம் என்பதை உறுதியோடு சொல்கிறேன்.

இந்த ஆட்சியில் எடப்பாடி எதைப் பற்றியும் கவலைப்படாமல் தான் உண்டு தனது கொள்ளை உண்டு என செயல்படுகிறார். இயற்கை சீற்றத்தால் பாதித்தபோது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, நீட் தேர்வு மரணம் என பலவற்றால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது எங்காவது நேரில் சென்று ஆறுதல் அளித்தாரா? அதனால் தான் சொல்கிறேன் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பற்றி அக்கறை இல்லை என்று.

அதேபோல் டெல்டா பகுதியை நாசப்படுத்த வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு எடப்பாடி அரசு வெறும் கடிதம் எழுதி மோடி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. மோடி அந்த கடிதத்தைப் படிக்ககூட மாட்டார். ஏன் அதனை பிரிக்ககூட மாட்டார். அதனால் தான் மோடி - எடப்பாடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக 27-ம் தேதி தி.மு.க போராட்டம் அறிவித்திருக்கிறோம்” என குறிப்பிட்டு பேசினார்.