M K Stalin

“எடப்பாடிக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா ?” : நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்த ஸ்டாலின் கேள்வி !

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தி.மு.க-வின் சென்னை மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு மாவட்டங்களில் இருந்தும், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்தும் சுமார் 83 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பப்பட்டன. நிவாரணம் வழங்கும் வாகனங்களுக்கு கொடியசைத்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அங்குள்ள தி.மு.க-வினர் பொருட்களைப் பிரித்து வழங்குவார்கள் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஏன் ஆய்வு செய்யவில்லை என அவரிடம் கேள்வி எழுப்புங்கள். அவர் அமெரிக்கா மற்றும் லண்டன் சுற்றுப்பயணம் செல்லும் முனைப்பில் உள்ளதால் நீலகிரியில் ஆய்வு மேற்கொள்ள அவருக்கு நேரமில்லாமல் இருக்கலாம்.

நீலகிரி மறுசீரமைப்புக்கு என்னுடைய தனிப்பட்ட நிதியை வழங்கியதாக நான் கூறவில்லை. எங்களுடைய எம்.பி.,களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துதான் வழங்கியிருக்கிறோம் . விரைவில் எடப்பாடி பழனிசாமி நீலகிரிக்கு நிதி ஒதுக்குவார். அது என்ன அவர் பாக்கெட்டில் இருந்தா கொடுக்கப் போகிறார்? மக்கள் வரிப்பணத்தைத் தான் வழங்கப்போகிறார்.

விளம்பரத்திற்காக நான் நீலகிரியில் ஆய்வு மேற்கொண்டதாக அ.தி.மு.க மற்றும் அவர்களது கூட்டணிக் கட்சியினர் கூறுவது குறித்து நான் கவலைப்படப் போவதில்லை . எதிர்க்கட்சி என்ற முறையில் அரசைக் கொஞ்சமாவது செயல்படவைக்கவே நான் முயற்சிக்கிறேன்” எனத் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.