India

மத்திய பிரதேசத்தில் 5 ஆண்டுகளில் 7 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடல்! : ஒன்றிய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்திய ஒன்றியத்திலும், வட மாநிலங்களிலும் பிரிவினையை முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க, மக்களின் வளர்ச்சிக்கு உதவும் கல்வியை பறித்து, பிரிவினை சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதற்கு சான்றாக, பள்ளிக் கல்வியில் சாதி - மதம் சார்ந்த பிரிவினை கருத்துக்களை பாடமாக திணிக்கும் வகையில், ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் கூறுகளும் அமைந்துள்ளன.

இந்த பிரிவினையை வளர்க்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதற்காக, தமிழ்நாட்டிற்கான உரிய கல்வி நிதியை தராமல் வஞ்சிக்கவும் செய்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இந்நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி, ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையின்வழி, கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 18,725 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் குறிப்பாக, பா.ஜ.க ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் 2020 - 21 கல்வியாண்டில் 99,152 அரசுப் பள்ளிகள் இயங்கி வந்த நிலையில், 2024 - 25 நிதியாண்டில் இயங்கும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 92,250-ஆக குறைந்துள்ளது. அதாவது சுமார் 7 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இது ஒரு மாநிலத்தோடு நிற்கவில்லை. பா.ஜ.க.வின் கோட்டையாக கருதப்படும் குஜராத்திலும், 34,967 அரசுப் பள்ளிகள் இயங்கி வந்த நிலையில், 2024 - 25 கல்வியாண்டில் அது 34,638-ஆக குறைந்துள்ளது.

பா.ஜ.க ஆளும் பிற மாநிலங்களிலும் இந்த சாதனை தொடர்ந்து வருகிறது.

இவ்வேளையில், குஜராத் மாடல் எனும் பா.ஜ.க.வின் மாடலை அனுமதிக்காத தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது. 2021 - 22 கல்வியாண்டில் 37,589 ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, 2024-25 கல்வியாண்டில் 37,626-ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை கூடியது மட்டுமல்லாமல், உயர்கல்வி விழுக்காடும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதிலும் பெண்களின் பங்கு, தனிச்சிறப்பிற்குரிய இடத்தைப் பெற்று வருகிறது.

இத்தகைய சூழலில், குஜராத் மாடலை விமர்சித்தும், தமிழ்நாடு மாடலை பறைசாற்றியும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “பிரதமர் மோடி மிகவும் ஆபத்தானவர்” : நடிகர் கிஷோர் விமர்சனம்!