India

‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!

இந்திய கூட்டாட்சியின் கீழ் வாழும் குடிமக்களின் தனிமனித உரிமையை தொடர்ந்து கேள்விக்குறியாக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதில் ஒன்றிய பா.ஜ.க அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

மக்களிடம் இருந்து தரவுகளை அத்துமீறி பெற்று அதன் வழி பா.ஜ.க தனக்கே உரித்தான குதர்க்க அரசியல் செய்ய ஒன்றிய அரசின் தொலைத் தொடர்புத் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இதனை சுட்டிக்காட்டி இந்திய அளவிலான இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவிப்பதாலும், மக்கள் காட்டுகிற வெளிப்படையான அதிருப்தியினாலும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளில் சில பின்வாங்கப்படுகின்றன. அப்படியான நடவடிக்கைதான் இன்றும் நடந்துள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து ஸ்மார்ட் கைப்பேசிகளிலும் ஒன்றிய அரசின் ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம் இடம் பெறவேண்டும் என்று ஒன்றிய தொலைத் தொடர்புத் துறை உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த செயலி அனைத்து புதிய கைப்பேசிகளிலும் இருக்கவேண்டும் என்றும் பழைய கைப்பேசிகளில் மென்பொருள் புதுப்பித்தல் (Software Update) மூலம் இந்த செயலி இடம் பெறவேண்டும் என்றும் அடுத்த 120 நாட்களுக்குள் இந்த பணியை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து கைப்பேசி நிறுவனங்களுக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

ஒன்றிய அரசின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ், திமுக, பொதுவுடைமை இயக்கங்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

‘சஞ்சார் சாத்தி’ செயலி கைப்பேசியில் இருந்தால், அழைப்புப் பதிவுகள், புகைப்படங்கள் உள்ளிட்ட தனிமனிதரின் தனிப்பட்ட தகவல்களை ஒன்றிய அரசு கண்காணிக்க வாய்ப்புள்ளதாக இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை அடுத்து ‘சஞ்சார் சாத்தி’ செயலி கைப்பேசிகளில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவில் இருந்து ஒன்றிய அரசு பின்வாங்கியுள்ளது.

இந்த செயலியை விரும்பினால் பயன்படுத்தலாம் என்றும் கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Also Read: தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!