India

UPI பயனர்களுக்கு ஒரு நற்செய்தி : ரூ.10 லட்சம் வரை பணப் பரிவர்த்தனை!

இந்தியாவில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருமே Google Pay, Phone Pay, Paytm, Amazon Pay போன்ற Unified Payments Interface (UPI) app-க்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தனிநபரிடம் இருந்து வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பை ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து NPCI எனப்படும் இந்திய தேசிய கட்டண கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், UPI பரிவர்த்தனைகளின் வரம்பை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தனிநபரிடம் இருந்து வணிகம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மூலதன சந்தையில் முதலீடு செய்தல், காப்பீட்டு பிரீமியம், பயண முன்பதிவுக்கு ஒரே நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும் என்றும், 10 லட்சம் ரூபாய் வரையிலான அதிகபட்ச பரிவர்த்தனையை 24 மணி நேரத்தில் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவதற்கான வரம்பு ஒரு நாளில் அதிகபட்சமாக 6 லட்சம் வரை செலுத்தலாம் என்றும், கடன் மற்றும் மாதத் தவணைக்கான வரம்பு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நகைகளை வாங்க UPI மூலம் பயனர்கள் ஒரு நாளைக்கு 6 லட்சம் செலுத்த முடியும் என்றும், வங்கி டெபாசிட், கால வைப்புக்கான வரம்பும் பரிவர்த்தனை 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, வணிகர்களுக்கும் பயனளிக்கும் என குறிப்பிட்டுள்ள NPCI தனிநபரிடம் இருந்து தனிநபர் பரிவர்த்தனைகளுக்கான வரம்பு, முன்பு போலவே நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாயாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? - தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய விளக்கங்கள் இதோ!