India

”நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” : திருச்சி சிவா MP பேட்டி!

துணை குடியரசு தலைவராகவும், மாநிலங்களவை தலைவராகவும் ஜெகதீப் தன்கர் உள்ளார். இவர் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளின் போது,எதிர்க்கட்சிகளை பேச அனுமதி கொடுக்காமல் இருந்து வருகிறார். அப்படியே பேச அனுமதி கொடுத்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் அனுமதி கொடுப்பதில்லை.

ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி கொடுக்கிறார். இவரது ஒருதலைபட்ச நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை தி.மு.க குழு தலைவர் திருச்சி சிவா ”நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் பெரும் ஆபத்தில் உள்ளது. ஜனநாயகத்தை நசுக்கும் பணியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த பணியை காவல் காக்கும் பணியில் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை தலைவரும், எதிர்க்கட்சி தலைவரும் இரு தூண்கள் ஆவர். பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்க்கட்சி தலைவர் பேச முழு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், எதிர்க்கட்சி தலைவர் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கார்கே அவர்கள் பேச தொடங்கினால் மைக்கை ஆஃப் செய்து விடுகின்றனர். இல்லையென்றால் அவரை பேசவிடாமல் ஆளுங்கட்சியினர் குரல் எழுப்புகின்றனர்.

ஆளுங்கட்சியினர் பேசினால் அனுமதி வழங்கப்படுகிறது.ஆனால் எதிர்க்கட்சியினர் பேசினால் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை- குரல் நசுக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.