India

மோடியை சந்திக்கவிருந்த எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு : காரணம் என்ன ?

உலக பணக்காரர் எலான் மஸ்க் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் டெஸ்லா கார் தொழிற்சாலையை தொடங்க எலான் திட்டமிட்டதாக கூறப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டெஸ்லா கார் தொழிற்சாலையை அமைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்தது.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் சந்தித்து பேச திட்டமிடப்பட்டிருந்தது. நாடாளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தலுக்கு முன்னர் இந்த சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தியா வர இருந்த எலான் மஸ்க்கின் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பயணத்தை ரத்து செய்த எலான் மஸ்க் இந்தாண்டு பிற்பாதியில் இந்தியா வர உள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் எலான் மஸ்க், இந்தியா வர இருப்பதை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பயணத்தை போல் பெரிதுபடுத்த பா.ஜ.க. முயற்சித்து, அதன்மூலம் தேர்தலில் ஆதாயம் பெற பாஜக திட்டமிட்டிருந்தது.

ஆனால் டெஸ்லா நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க் வருகை ரத்தானதால் மோடி ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தியாவில் எலான் மஸ்க் 20 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. அதே போல குஜராத்தில் முதலீடு செய்ய எலான் மஸ்க் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

Also Read: சுதந்திர உணர்வுடன் பயணங்களை மேற்கொள்ளும் பெண்கள் : விடியல் பயணத் திட்டத்தை பாராட்டிய THE HINDU !