India

18 அடி ஆழ்துளை கிணறு... 18 மணி நேர போராட்டம்... 15 மாத குழந்தைக்கு என்ன நடந்தது ?

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியை அடுத்துள்ளது லச்சியான் என்ற கிராமம். இங்கு 15 மாத சாத்விக் என்ற குழந்தை ஒன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்த சுமார் 15-20 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. குழந்தையை காணவில்லை என்று குடும்பத்தினர் தேடவே, சிறுவன் சாத்விக்கின் அழுகுரல் ஆழ்துளை கிணற்றில் கேட்டுள்ளது.

இதையடுத்து பதறி போன குடும்பத்தினர், உதவிக்காக தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்டவற்றிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த மீட்புக்குழு, சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று மாலை முதல் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், சுமார் 18 மணி நேர முயற்சிக்கு பிறகு சிறுவனை பத்திரமாக மீட்டனர் மீட்பு குழுவினர்.

இதனிடையே சிறுவனை மீட்பு குழுவினர், வீடியோ மூலம் பார்த்தபோது சிறுவனின் அசைவுகளை கண்டனர். தொடர்ந்து சிறுவனுக்கு சுவாசிக்க ஏதுவாக உள்ளே பைப் மூலம் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. தொடர்ந்து தீவிர முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். சிறுவன் சாத்விக் 18 அடி ஆழத்தில் குழந்தை தலைகீழாக சிக்கியிருந்த நிலையில், பக்கவாட்டில் குழி தோண்டி, கீழிருந்து மேலே சென்று குழந்தையை பத்திரமாக மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.

தற்போது மீட்டெடுக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த ஆழ்துளை கிணறு, சிறுவனின் தந்தை தோண்டியது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Glyoxylic Acid: Hair Straightening செய்த இளம்பெண்ணுக்கு சிறுநீரில் ரத்த கசிவு - மருத்துவர்கள் எச்சரிக்கை!