India

பா.ஜ.க.வின் பெருமை பாடினால் பதவி உறுதி! : தகுதியற்றவர்கள் தலைமை தாங்கும் அவலம்!

மக்களின் மனநிலையை உணர்ந்து, சமத்துவ உணர்வுடன் அரசியலை கையாளும் கருத்தியல் கொண்ட தகுதி பெற்ற அரசியல்வாதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.

குறிப்பாக, ஒன்றியத்தில் ஆட்சிபுரியும் பா.ஜ.க.வின் நகர்வுகள். இதனை மேலும் தெளிவுபடுத்துக்கின்றன. அவ்விதத்தில் தான், தற்போது வெளியிடப்பட்டிருக்கிற பா.ஜ.க.வின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்களும் அமைந்துள்ளன.

இந்தியா விடுதலையடைவதற்கு முன், இந்தியா என்ற பெயர் சூட்டப்படுவதற்கு முன், ஆங்கிலேயர்களால் அடிமைப்பட்டிருந்த போது, மக்களின் உரிமை மீட்கும் போராட்டங்கள், பல தரப்பட்ட மக்களால் பல வகையில் முடுக்கி விடப்பட்டன.

அதில், பல தலைவர்கள் உருவாகினர், பல போராளிகளின் உயிர்நீக்கமும் இடம்பெற்றது. அவ்வாறு போராடியவர்களில் காந்தி, நேரு ஆகியோரின் பெயர்கள் தேசிய அளவில் புகழ்பெற்றினும், தென் மாநிலங்களின் குறிப்பாக தமிழ்நாட்டின், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார், கொடி காத்த குமரன் உள்ளிட்டவர்களின் பங்கு அளப்பற்கரியதாக விளங்குகிறது.

அவர்களின் போராட்டம் ஆயுதம் ஏந்திய போராட்டம் அல்ல. அமைதி வழியில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்கும் வகையில் அமைந்த போராட்டம்.

அதனால், அவர்களுக்கு கிடைத்த பரிசு, வறுமையும், சிறையும் தான். இத்தகு இன்னல்கள் பலதை நம் முன்னோர்கள் சந்தித்ததன் காரணமாகவே, நாம் இப்போது ஓரளவு விடுதலையாக வாழ்ந்து வருகிறோம்.


இந்நிலையில், அவ்வரலாற்றை பற்றி எந்த அறிதலும், புரிதலும் இல்லாத ஒருவர், சில மாதங்களுக்கு முன், தேசிய செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “பா.ஜ.க.வின் ஆட்சிக்கு பின்னே, நாம் விடுதலையானதாக நான் உணர்கிறேன்” என வாய் வந்த போக்கிற்கு அளந்துவிட்டார். அதற்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.

எனினும், விமர்சனங்களை புறந்தள்ளி, அவர் தனது பேச்சில் உறுதியாக இருந்தார். அது அபோதைய அளவில் குழப்பமாக இருப்பினும், தற்போது தெளிவடைந்திருக்கிறது.

அந்த தெளிவு தான், பா.ஜ.க.வின் மக்களவை வேட்பாளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள, அந்த வரலாற்று அறிதலும், புரிதலும் இல்லாத ஒருவரான, நடிகை கங்கனா ரனாவத் பெயர்.

இவ்வாறு மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்து, பா.ஜ.க.வின் புகழ் பாடினால் போதும், அடிப்படை தொண்டாராக இல்லாவிடினும் சரி, அரசியல் தெளிவு இல்லாவிடினும் சரி, அவர்களுக்கு பதவி கிடைக்கும் என்பதே, பா.ஜ.க.வின் முதன்மையான தாரக மந்திரமாக விளங்கி வருகிறது.

அதற்கு எடுத்துக்காட்டு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்கனா ரனாவத் மட்டுமல்ல, கவுதம் கம்பீர், சச்சின் ஆகிய கிரிக்கெட் வீரர்களும், நடிகர், நடிகையர்கள் பலரும் இதற்கு எடுத்துக்காட்டுகள் தான்.

இவ்வாறு உள்ளவர்களை பா.ஜ.க, தேர்ந்தெடுக்க மற்றொரு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, அரசியல் தெளிவற்றவர்களை பதவியில் வைத்தால் தான், தலைமை எது சொல்கிறதோ, அதனில் சிறிதளவு மாற்றுக்கருத்தும் இன்றி அதனை பின்பற்றுவர் என்ற எண்ணம்.

இவ்வாறு, தனது கட்சியின் நலனுக்காகவும், தனது பாசிச உணர்வை தக்கவைக்கவும், மக்களின் வாக்குகளை வீணடிக்கும் பா.ஜ.க.விற்கு எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.

Also Read: “அடிப்படை அறிவு கூட இல்லையா?” - கோவை வெப்பம் குறித்து அண்ணாமலை பேச்சுக்கு பூவுலகு சுந்தரராஜன் பதிலடி !