India

”பிரிப்பவர்கள் நசுக்கப்படுவார்கள் - இளைஞர் ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி” : ராகுல் காந்தி MP!

உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்.17,18 ஆம் தேதிகளில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 60 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் இந்த தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாகவே கசிந்ததாக சமூகவலைதளங்களில் வீடியோ பரவியது. இதையடுத்து தேர்வு எழுதிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறை தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் வேறுவழி இன்றி தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும் 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாணவர் சக்திக்கும் இளைஞர் ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி MP சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரது பதிவில், "உண்மையை அரசாங்கம் எவ்வளவுதான் நசுக்க முயற்சித்தாலும் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலமே நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். ஒன்றுபடுபவர்கள் வெற்றி பெறுவார்கள், பிரிப்பவர்கள் நசுக்கப்படுவார்கள்." என தெரிவித்துள்ளார்.

Also Read: சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா: கண்ணாடி மாளிகை - Super Tree டவர்!