India

புத்தாண்டுக்கு Photoshoot... இளம்பெண்ணுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர்.. கோபத்தில் எடுத்த விபரீத முடிவு !

அன்றாட உலகில் அனைவரும் டிஜிட்டலை பயன்படுத்தி வருகிறோம். இதில் பலரும் போட்டோ உள்ளிட்டவைகளுக்கு அடிமையாகி இறுகின்றனர். ஒரு மொபைல் போன் வாங்க வேண்டுமென்றாலும், அதில் முதல் முக்கியத்துவம் கேமராவுக்கு தான். இப்படி ஒவ்வொன்றும் மாறி வர, அண்மைக்காலமாக போட்டோஷூட் என்ற ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.

ப்ரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங், பிறந்த நாள், வளைகாப்பு உள்ளிட்ட அனைத்திற்கும் போட்டோஷூட். இது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிடித்த ஒரு விஷயமாக மாறி வருகிறது. இந்த சூழலில் இளம்பெண் ஒருவர் புத்தாண்டு அன்று போட்டோஷூட் எடுக்க ஆசைப்பட்ட நிலையில், அவருக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள சுதாமா நகரில் வர்ஷினி (21) என்ற இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அருகில் இருக்கும் கல்லூரி ஒன்றில் BBA படிக்கும் இவர், போட்டோக்ராஃபி படிப்பும் படித்துள்ளார். இந்த சூழலில் போட்டோஷூட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், அடிக்கடி இப்படி போட்டோ எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை புத்தாண்டுக்காக மாலில் இருந்து போட்டோஷூட் எடுக்க எண்ணியுள்ளார். இதனை தனது பெற்றோரிடம் ஞாயிற்றுகிழமை காலையில் கூறவே, அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவரை கடுமையாக திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். அப்படியும் திறக்கவில்லை என்பதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே பரிசோதிக்கையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இது குறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்த அவர்கள், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததோடு, தற்கொலை செய்துகொண்ட இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் மாணவியின் செல்போனை மீட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு அன்று Photoshoot எடுக்க ஆசைப்பட்ட இளம்பெண்ணுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: போலிஸ் காரை திருடி Selfie எடுத்து வெளியிட்ட வாலிபர் : குஜராத்தில் நடந்தது என்ன?