India

சகோதரனுக்கு சிறுநீரக தானம் செய்த மனைவி : அடுத்து கணவன் செய்த அதிர்ச்சி செயல் - உ.பியில் பகீர்!

உத்தர பிரதேச மாநிலம் பைரியாஹி பகுதியைச் சேர்ந்தவர் குல்சைபா. இவரது கணவர் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குல்சைபாவின் சகோதரருக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது.

அப்போது மருத்துவர்கள் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அப்படிச் செய்தால்தான் அவரது உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியதை அடுத்து குல்சைபா தனது சிறுநீரகம் ஒன்றைத் தானமாகக் கொடுக்க முன்வந்துள்ளார்.

இது குறித்து அவரது கணவருக்குத் தெரியவந்துள்ளது. தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆவேசப்பட்டுள்ளார். அப்போது தனது சகோதரன் நிலை குறித்து அவர் எடுத்துரைத்துள்ளார். இருந்தும் அவரது கணவர் மனைவி சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதையடுத்து வீடியோ காலில் மூன்று முறைத் தலாக் கூறி விவாகரத்து அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குல்சைபா இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மோடி இல்லத்தின் வாசலில் பத்ம ஸ்ரீ விருதை வைத்து சென்ற பஜ்ரங் புனியா: ஒன்றிய அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!