India

தலித் மாணவர்களை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்து கொடுமை : பள்ளி ஆசிரியர்கள் தலைமறைவு !

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் மாலூர் தாலுகாவில் மொரார்ஜி தேசாய் குடியிருப்பு பள்ளி அமைந்துள்ளது. இங்கு அனைத்து சமூகத்தையும் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு நடந்த சம்பவம் ஒன்று கர்நாடக மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

இந்த பள்ளியின் விடுதியில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி அன்று 7 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் 6 பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாணவர்களை பள்ளி தலைவமை ஆசிரியர் மற்றும் வார்டன் அங்குள்ள இரண்டு ஆசிரியர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

முதலில் மாணவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தாலும், பின்னர் தலைமை ஆசிரியரின் கட்டாயத்தின் பேரில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி அதனை சுத்தம் செய்துள்ளனர். இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்த நிலையில், போலிஸார் தலைவமை ஆசிரியர் மற்றும் வார்டன் இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் தலைமறைவான நிலையில், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தலைமை ஆசிரியர் பாரதம்மா, ஆசிரியர்கள் முனியப்பா, அபிஷேக், விடுதி வார்டன் மஞ்சுநாத் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் : “பா.ஜ.க. உறுப்பினர்களும் பீதியில் இருக்கிறார்கள்” - முரசொலி !