India

மதுபோதையில் கீழே விழுந்ததில் காயம் : வன்கொடுமை செய்யப்பட்டதாக இளம்பெண் புகார் - விசாரணையில் அதிர்ச்சி !

பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் தொழில்நுட்ப துறையில் பணி செய்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 12-ம் தேதி இரவு கோரமங்களாவில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்று மது அருந்தியுள்ளார். இரவு 11:30 மணி வரை அங்கு மது அருந்தியுள்ளார்.

பின்னர் தனியே அங்கிருந்து வெளியே வந்த அவர் மதுபோதையில் ஆடுகோடி என்ற பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்து எழுந்த அவர், தனது உடலில் காயங்கள் இருப்பதை கண்டு யாரோ தன்னை மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று கருதியுள்ளார்.

பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்த நிலையில், போலிஸார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, மதுபோதையில் இருந்த அந்த பெண் அடிக்கடி கீழே விழுந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து அவரிடம் சிசிடிவி காட்சிகளை காட்டிய போலிஸார், அந்த பெண்ணை யாரும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்றும், அவர் மதுபோதையில் கீழே விழுந்ததால் அவரின் உடலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து பேசியுள்ள போலீசார், அந்த பெண் மது போதையில் ஒரு மணி நேரமாக நடந்ததில், அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார் என்றும், எனினும் அதிக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

Also Read: உ.பி : காணாமல் போன சடலத்தின் கண்கள்.. 2 மருத்துவர்கள் சிறையில் அடைப்பு.. உடலுறுப்பு வியாபாரம் நடந்ததா ?