India
தமிழ்நாட்டை பின்பற்றும் தெலங்கானா.. சொன்னதை செய்த காங். : மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்!
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்தே பல நலத்திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றே கையெழுத்திட்ட திட்டங்களில் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் முக்கியமாக அமைந்தது.
மகளிருக்கு கட்டணமில்லா இலவச பயணம் திட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரால் கையெழுத்திட்ட மறுநாள் முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 2 ஆண்டுகளை தாண்டியும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், பெண்கள் பலரும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இப்படி ஒரு மகத்தான திட்டத்தினால், பெண்கள் தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடிகிறது. இது பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த இலவச பயண திட்டத்தில், தமிழ்நாட்டு பெண்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநில, வேறு நாட்டை சேர்ந்த பெண்களும் பயனடைகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் பெண்கள் குறிப்பிட்ட தொகையை சேமிக்கின்றனர். இந்த திட்டமானது நாட்டில் அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், பிற மாநிலங்களும் இதனை பின்பற்ற எண்ணுகின்றனர்.
அந்த வகையில் கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளில் இலவச பேருந்து பயண திட்டத்தையும் முக்கியமாக அறிவித்தது. இதில் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய உடனே, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் தொடங்கி வைத்தது.
மேலும் அதில் கர்நாடக பெண்கள் மட்டுமே பயனடைய முடியும் என்றும், பேருந்தில் பயணம் செய்யும்போது, தங்கள் அடையாள அட்டையை காண்பித்தால், 0 கட்டணம் டிக்கெட் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இது தற்போது நடைமுறையில் இருக்கும் நிலையில், தற்போது தெலங்கானாவிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து கடந்த 7-ம் தேதி (நேற்றைய முன்தினம்) முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்ற நிலையில், இன்று (டிச. 9) இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 'மகா லட்சுமி' என்ற இந்த திட்டத்தின் கீழ், 6 வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சி கொடுத்தது.
அதில் முக்கியமான மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டமானது, தெலங்கானாவில் இருக்கும் அனைத்து மகளிர், திருநங்கைகளுக்கு மட்டுமே பொருந்தும். பெண்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது, தங்கள் அடையாள அட்டையை காண்பித்தால், 0 கட்டணம் டிக்கெட் வழங்கப்படும். இந்த திட்டத்தை இன்று அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அம்மாநில 2 பெண் அமைச்சர்களான சீதக்கா, கொண்டா சுரேகா ஆகியோரும் உடன் இருந்தனர். இதில் பயணித்த மகளிர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தியாவிலேயே முதல் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மகத்தான திட்டமானது, தற்போது பெரும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!